காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாநகராட்சியில் 36வது வார்டு தேர்தல் ஒத்திவைக்கப்பட்டுள்ளதாக தேர்தல் அலுவலரும், ஆணையருமான நாராயணன் அறிவித்துள்ளார். அதிமுக வேட்பாளர் ஜானகிராமன் மரணம் காரணமாக 36வது வார்டுக்கு மட்டும் தேர்தல் நிறுத்தப்பட்டுள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி பின்னர் அறிவிக்கப்படும் எனவும் கூறப்பட்டுள்ளது. தமிழ்நாட்டில் 21 மாநகராட்சிகள், 138 நகராட்சிகள், 490 பேரூராட்சிகள் என 649 நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தேர்தல் பிப்ரவரி 19-ம் தேதி ஒரேகட்டமாக நடைபெற உள்ளது. தேர்தலில் பதிவாகும் வாக்குகள் பிப்ரவரி 22-ம் தேதி எண்ணப்பட்டு அன்றே முடிவுகள் அறிவிக்கப்படுகிறது. தேர்தல் நெருங்கி வரும் நிலையில் அனைத்து கட்சி வேட்பாளர்களும் தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றனர். தேர்தலில் போட்டியிடும் இறுதி வேட்பாளர் பட்டியல் கடந்த 7-ம் தேதி வெளியிடப்பட்டது. காஞ்சிபுரம் மாநகராட்சியில் மொத்தம் 51 வார்டுகள் உள்ளன. இதில் 36-வது வார்டில் அ.தி.மு.க. வேட்பாளராக ஜானகிராமன் போட்டியிட்டார்.