திருமலை: திருமலையில் இருந்து ஸ்ரீவாரி பாதம் செல்வதற்கு நேற்று முதல் அரசு பஸ் சேவை தொடங்கியது. இதற்கு ₹55 கட்டணம் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. திருப்பதி ஏழுமலையான் கோயிலில் சுவாமி தரிசனம் செய்ய வரும் பக்தர்கள், திருமலையில் உள்ள பாபவிநாச தீர்த்தம், அனுமன் பிறந்த இடமான அஞ்சனாத்திரியில் உள்ள அஞ்சனாதேவி-பால ஆஞ்சநேயர் சுவாமி கோயில், ஆகாச கங்கை, ஜாபாலி ஆஞ்சநேயர் கோயில் ஆகியவற்றை தரிசனம் செய்கின்றனர். பக்தர்கள் வசதிக்காக ஆந்திர மாநில போக்குவரத்து கழகம் சார்பில் பஸ்கள் இயக்கப்பட்டு வருகிறது.
ஏழுமலையான் கோயில் பின்புறம் உள்ள நாராயணகிரி மலை உச்சியில் உள்ள வாரி பாதம் செல்வதற்கு அரசு பஸ் போக்குவரத்து வசதி இல்லை. இதனால், பக்தர்கள் தனியார் ஜீப், கார்களில் செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது.