ஆவின் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகி விஜய நல்ல தம்பிக்கு முன்ஜாமின் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு

டெல்லி: ஆவின் வேலை வாங்கித் தருவதாக பண மோசடி வழக்கில் அதிமுக முன்னாள் நிர்வாகி விஜய நல்ல தம்பிக்கு முன்ஜாமின் வழங்க உச்ச நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது. விஜய நல்ல தம்பி ஜாமின் கோரி விண்ணப்பித்தால் விரைந்து விசாரிக்க நீதிமன்றத்துக்கு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. நீதிமன்றத்தில் சரணடைந்து ஜாமின் மனுதாக்கல் செய்ய நீதிபதிகள் அறிவுறுத்தியுள்ளனர். ஆவின் நிறுவனத்தில் வேலை வாங்கித்தருவதாக கூறி 10 பேரிடம் மொத்தம் ரூ.3 கோடி வாங்கி மோசடி செய்துவிட்டதாக முன்னாள் அமைச்சர் கே.டி.ராஜேந்திர பாலாஜி மீது மேற்கு ஒன்றிய அதிமுக செயலாளர் விஜய நல்லதம்பி வெம்பக்கோட்டையில் புகார் கொடுத்தார். விஜய நல்லதம்பி வழியாகவே பணம் கொடுத்ததாகப் பலரும் புகார் கூறியதால், அவர் மீதும் போலீஸார் வழக்குப் பதிவு செய்தனர். அதிமுகவில் இருந்தும் அவர் நீக்கப்பட்டார்.

ராஜேந்திர பாலாஜி, விஜய நல்லதம்பி ஆகியோர் முன் ஜாமீன் கேட்டு தாக்கல் செய்த மனு தள்ளுபடியானதால் இருவரும் தலைமறைவானார்கள். பிறகு, ராஜேந்திர பாலாஜியைக் கர்நாடகா மாநிலம் ஹாசனில் தனிப்படை போலீஸார் கைது செய்தனர். தற்போது அவர் நீதிமன்ற உத்தரவுப்படி நிபந்தனை ஜாமீனில் உள்ளார். அடுத்த ஒரு வாரத்தில் கோவில்பட்டி அருகே விஜய நல்லதம்பியை மடக்கிப் பிடித்த போலீஸார், இந்த மோசடி குறித்து விருதுநகர் மாவட்ட குற்றப்பிரிவு அலுவலகத்தில் வைத்து விசாரணை நடத்தினர். தினமும் விசாரணைக்கு ஆஜராக வேண்டும் என்ற நிபந்தனையுடன் அவரும் விடுவிக்கப்பட்டார். ஆகவே புகாரின் அடிப்படையில் விஜய் நல்லதம்பியும் கைது செய்யப்பட்டார். இந்நிலையில் அதிமுக முன்னாள் நிர்வாகி விஜய நல்ல தம்பி தனக்கு ஜாமின் வழங்குமாறு உச்சநீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்திருந்தார். விசாரணை இன்று நடைபெற்ற நிலையில் அவரின் முன்ஜாமின் மனுவை தள்ளுபடி செய்தது.

Related Stories: