முதல் முறையாக போர் விமானங்கள் சாகசத்துடன் இன்று குடியரசு தின விழா அணிவகுப்பு; டெல்லியில் உச்சகட்ட பாதுகாப்பு

புதுடெல்லி: நாட்டின் 73வது குடியரசு தினத்தையொட்டி, குடியரசு தின விழா அணிவகுப்பு இன்று நடக்க உள்ளது. அணிவகுப்பில் முதல் முறையாக 75 போர் விமானங்கள் சாகசம் நிகழ்த்த உள்ளன. நாட்டின் 73வது குடியரசு தின விழா இன்று கொண்டாடப்படுகிறது. கடந்த ஆண்டு  கொரோனா பரவல் காரணமாக தலைநகர் டெல்லியில் கடுமையான கட்டுப்பாடுகளுடன் குடியரசு தின விழா அணிவகுப்பு நடத்தப்பட்ட நிலையில், இந்த ஆண்டும் கொரோனா கட்டுப்பாடுகளுடன் ராணுவ அணிவகுப்பு நடத்துவதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. வழக்கத்தை விட அரை மணி நேரம் தாமாதமாக காலை 10.30 மணிக்கு குடியரசு தின அணிவகுப்பு தொடங்க உள்ளது. ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் தேசியக் கொடியை ஏற்றி வைத்து, அணிவகுப்பு மரியாதையை ஏற்றுக் கொள்வார். இந்த அணிவகுப்பு, விஜய் சவுக் பகுதியில் இருந்து தொடங்கி ராஜபாதை வழியாக தேசிய மைதானத்தை அடையும். விழாவில், சிறப்பாக பணியாற்றிய வீரர்களுக்கு ஜனாதிபதி ராம்நாத் கோவிந்த் பதக்கங்களை வழங்குவார். பிரதமர் மோடி, ஒன்றிய அமைச்சர்கள், முப்படை தளபதிகள், உயரதிகாரிகள் உள்ளிட்டோர் பங்கேற்கின்றனர்.

கொரோனா பரவல் காரணமாக வெளிநாட்டு சிறப்பு விருந்தினர்கள் வருகை இம்முறை ரத்து செய்யப்பட்டுள்ளது. அதேபோல, 1.25 லட்சம் பார்வையாளர்கள் குடியரசு தின அணிவகுப்பை பார்வையிடுவர். இந்த ஆண்டு பார்வையாளர்களின் எண்ணிக்கை 4 ஆயிரமாக குறைக்கப்பட்டுள்ளது. 12 மாநிலங்களின் அலங்கார ஊர்திகள், பாதுகாப்பு, ஒன்றிய அரசின் பல்வேறு துறைகளை சேர்ந்த 9 அலங்கார ஊர்திகளுக்கு மட்டும் அனுமதி அளிக்கப்பட்டுள்ளது.

கடந்த 1965, 1971ம் ஆண்டு போரில் பயன்படுத் தப்பட்ட பீரங்கிகளும், தற்போதைய அதிநவீன ஆயுதங்களும் அணிவகுப்பில் இடம்பெற்று ராணுவத்தின் வலிமையை பறைசாற்ற உள்ளன. முதல் முறையாக ரபேல், சுகாய் உள்ளிட்ட 75 போர் விமானங்கள் பல்வேறு சாகசங்களை நிகழ்த்த உள்ளன. அனைவரும் அணிவகுப்பை எளிதாக கண்டுகளிக்கும் வகையில், 10 பிரமாண்ட எல்இடி திரைகள் ராஜபாதையில் அமைக்கப்பட்டுள்ளன. இவற்றில் அணிவகுப்பு நேரடியாக ஒளிபரப்பு செய்யப்படும்.

மேலும் நாடு முழுவதும் இருந்து தேர்ந்தெடுக்கப்பட்ட 480 நடனக் கலைஞர்கள் அணிவகுப்பில் கலைநிகழ்ச்சிகளை நடத்த உள்ளனர். முதல் முறையாக, 1000 டிரோன்களை கொண்டு ‘டிரோன் ஷோ’ நடத்தப்பட உள்ளது.

குடியரசு தின விழாவை சீர்குலைக்க தீவிரவாத அமைப்புகள் சதித் திட்டம் தீட்டியிருப்பதாக உளவுத்துறை எச்சரிக்கை விடுத்துள்ளதால், டெல்லி முழுவதும் பாதுகாப்பு பலப்படுத்தப்பட்டுள்ளது.

939 பேருக்கு பதக்கம்: ஒன்றிய அரசு சார்பில் மாநில மற்றும் ஆயுதப்படை, ரயில்வே காவல்  அதிகாரிகள் உள்ளிட்டோருக்கு  வீர தீர செயல், பாராட்டத்தக்க பணிக்கான பதக்கம் மற்றும் சிறந்த சேவை பணிக்கான காவல்துறை பதக்கம்  வழங்கப்படும். இந்த ஆண்டு பதக்கம் பெறும் காவல்துறை அதிகாரிகள் பட்டியல் நேற்று வெளியிடப்பட்டது.  நாடு முழுவதும் மொத்தம் 939 காவல்துறையினருக்கு விருதுகள் அறிவிக்கப்பட்டுள்ளது. இதில் 189 பேருக்கு வீரதீர செயலுக்கான பதக்கம் வழங்கப்படுகின்றது.

Related Stories: