களக்காடு அருகே வாலிபர் மீது தாக்குதல்: 3 பேருக்கு வலை

களக்காடு: களக்காடு அருகே வாலிபரை தாக்கிய தந்தை, மகன் உள்பட 3 பேரை போலீசார் தேடி வருகின்றனர். களக்காடு அருகேயுள்ள சிதம்பரபுரம் முத்துநகரை சேர்ந்தவர் வெட்டும் பெருமாள் மகன் அருண்பாண்டி (29). இவர் கோவையில் உள்ள தனியார் நிறுவனத்தில் மேற்பார்வையாளராக உள்ளார். கடந்த தீபாவளியன்று சிதம்பரபுரத்தை சேர்ந்த முருகன் மகன் கிருஷ்ணகுமார் பைக்கில் இருந்து தவறி விழுந்து காயமடைந்தார். இதைப்பார்த்த அருண்பாண்டி அவருக்கு உதவிகள் செய்தார். ஆனால் கிருஷ்ணகுமாரின் தந்தை முருகன், கிருஷ்ணகுமார் பைக்கில் இருந்து விழுந்ததற்கு அருண்பாண்டிதான் காரணம் என்று கருதி அவரிடம் தகராறு செய்தார். மேலும் அருண்பாண்டிக்கு கொலைமிரட்டல் விடுத்ததாகவும் கூறப்படுகிறது. இந்நிலையில் சம்பவத்தன்று அருண்பாண்டி சிதம்பரபுரத்தில் உள்ள சி.எஸ்.ஐ கிறிஸ்தவ ஆலயம் அருகே பைக்கில் வந்து கொண்டிருந்தார்.

அப்போது அங்கு வந்த கிருஷ்ணகுமாரின் சகோதரர் வசந்தகுமார், பாலகிருஷ்ணன் மகன் கணேஷ்குமார் ஆகியோர் முருகனின் தூண்டுதலின் பேரில் அருண்பாண்டியை வழிமறித்து, அவரை பைக்கில் இருந்து கீழே தள்ளி சரமாரியாக தாக்கினர். இதனால் காயம் அடைந்த அருண்பாண்டி சிகிச்சைக்காக நெல்லை அரசு மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். இதுகுறித்த புகாரின்பேரில் களக்காடு  போலீசார் வழக்குப்பதிந்து முருகன், அவரது மகன் வசந்தகுமார், கணேஷ்குமார் ஆகிய 3 பேரையும் தேடி வருகின்றனர்.

Related Stories: