பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமான மாணவி சாவு மாமல்லபுரம் உறைவிட பள்ளியின் தலைமை ஆசிரியர், பெண் வார்டன் கைது: போலீசுக்கு தகவல் தராததால் நடவடிக்கை

சென்னை: திருவண்ணாமலையை சேர்ந்த பிளஸ் 1 மாணவி பாலியல் வன்கொடுமையால் கர்ப்பமடைந்த தகவலை, போலீசுக்கு தெரிவிக்காமல் அலட்சியமாக நடந்து கொண்ட மாமல்லபுரம் பழங்குடியினர் நலத்துறை உண்டு, உறைவிட பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் விடுதி பெண் வார்டனை போலீசார் கைது செய்தனர்.திருவண்ணாமலை பகுதியை சேர்ந்தவர் 16 வயது சிறுமி,  மாமல்லபுரம் அருகே பட்டிப்புலத்தில் செயல்படும் பழங்குடியினர் நலத்துறை உண்டு, உறைவிட பள்ளியில் பிளஸ் 1 படித்து வருகிறார். தொடர் விடுமுறைக்கு பிறகு, கடந்த அக்டோபர் மாதம்தான் பள்ளிக்கு சென்றார். இந்நிலையில், விடுதியில் தங்கியிருந்த அந்த மாணவிக்கு கடந்த மாதம் 24ம் தேதி வயிற்று வலி ஏற்பட்டது. இதையடுத்து மாணவி வீட்டுக்கு அழைத்து செல்லப்பட்டார். இதற்கிடையில் அவர் தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக, அவரை திருவண்ணாமலை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். மாணவியை பரிசோதித்த டாக்டர்கள், 6 மாதம் கர்ப்பமாக இருப்பதை உறுதி செய்தனர்.

சிறுமியின் தாய் கொடுத்த புகாரின்பேரில் திருவண்ணாமலை மகளிர் போலீஸ் இன்ஸ்பெக்டர் அன்பரசி வழக்குப் பதிந்து விசாரணை நடத்தினார். நேற்று முன்தினம் சுய நினைவு திரும்பிய சிறுமியிடம் போலீசார் விசாரணை நடத்தினர். அவரால் பேச இயலவில்லை. எனவே, தன்னுடைய கர்ப்பத்துக்கு காரணம் ஹரிபிரசாத் என எழுதி காண்பித்தார். இதையடுத்து கள்ளக்குறிச்சியை சேர்ந்த ஹரிபிரசாத் (31) என்பவரை நேற்று முன்தினம் போக்சோ சட்டத்தில் போலீசார் கைது செய்தனர். கூலித்தொழிலாளியான இவர், காதல் திருமணம் செய்து, திருவண்ணாமலை கரியான் செட்டி தெருவில் வசித்து வருகிறார்.

மேலும், இந்த தகவல் சம்பந்தப்பட்ட பள்ளி தலைமை ஆசிரியர் மற்றும் விடுதி வார்டனுக்கு தெரிந்திருந்தும், உரிய நேரத்தில் சம்பந்தப்பட்ட பகுதியில் உள்ள போலீசுக்கும், குழந்தை நல குழுமத்துக்கும் தெரிவிக்காமல் அலட்சியமாக இருந்துள்ளனர்.எனவே, மாமல்லபுரம், பட்டிப்புலம் பழங்குடியினர் நல உண்டு உறைவிட பள்ளி தலைமை ஆசிரியர் குமரகுருபரன் (50), விடுதி வார்டன் செண்பகவள்ளி (37) ஆகியோரை நேற்று திருவண்ணாமலை மகளிர் போலீசார் கைது செய்தனர்.மாணவி சாவு: இதற்கிடையில், நேற்று முன்தினம் தனக்கு ஏற்பட்ட கொடுமைக்கு காரணமானவரின் பெயரை போலீசாரிடம் எழுதி காண்பித்துவிட்டு மீண்டும் சுயநினைவு இழந்த மாணவிக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டது. ஆனாலும், சிகிச்சை பலனின்றி அந்த மாணவி நேற்று மாலை 5.30 மணியளவில் பரிதாபமாக இறந்தார்.

Related Stories: