கோவை: கோவை மதுக்கரை வனச்சரகத்திற்கு உட்பட்ட சுகுணாபுரம் பகுதியில் உள்ள தன்னாசி ஆண்டவர் கோயில், கோலமாவு மலைப்பகுதியில் சிறுத்தை நடமாட்டம் இருந்தது. இதையடுத்து, மாவட்ட வன அலுவலர் உத்தரவின் பேரில், 2 இடங்களில் கூண்டு வைக்கப்பட்டது. நேற்று காலை 8 மணியளவில் குனியமுத்தூர் அடுத்த பி.கே.புதூர் பகுதியில் உள்ள தனியார் குடோனில் சிறுத்தை இருந்துள்ளது. இதனை கண்டவர் அதிர்ச்சி அடைந்த ஊழியர் வனத்துறை அதிகாரிகளுக்கு தகவல் தெரிவித்தார். இதையடுத்து, வனத்துறையினர் வந்து குடோன் முழுவதும் இருந்த ஓடுகளில் வலை விரித்தனர். வெளியே செல்ல உள்ள 2 வழிகளிலும் வனத்துறையினர் சிறுத்தையை பிடிக்க கூண்டு வைத்துள்ளனர். அதனை சுற்றியும் வலை அமைக்கப்பட்டது. கால்நடை மருத்துவர் குழுவினர் வந்து மயக்க ஊசி செலுத்தி சிறுத்தையை பிடிக்க முடியுமா என ஆய்வு செய்தபோது அதில் சிக்கல் இருப்பது தெரிய வந்ததால், சிறுத்தை தானாக கூண்டில் சிக்கும் வரை காத்திருக்க முடிவு செய்துள்ளனர்.