உச்ச நீதிமன்றத்தில் இந்தாண்டு அடுத்தடுத்து 8 நீதிபதிகள் ஓய்வு : நிலுவை வழக்குகள் அதிகரிக்க வாய்ப்பு

புதுடெல்லி : உச்ச நீதிமன்றத்தில் இரண்டு தலைமை நீதிபதிகள் உட்பட 8 நீதிபதிகள் இந்த ஆண்டு ஓய்வு பெற இருப்பதால், நிலுவை வழக்குகள் எண்ணிக்கை அதிகரிக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது. உச்ச நீதிமன்றத்தில் கடந்தாண்டு ஏப்ரலில் தலைமை நீதிபதியாக பொறுப்பேற்ற என்.வி.ரமணா இந்தாண்டு ஆகஸ்டில் ஓய்வு பெறுகிறார். இதனைத் தொடர்ந்து, புதிய தலைமை நீதிபதியாக பதவியேற்கும் யுயூ லலித்தும் நவம்பர் வரை இப்பதவியில் நீடிப்பார்.

பின்னர், அவரும் ஓய்வு பெற்று புதிய தலைமை  நீதிபதியாக சந்திரசூட் பதவியேற்க உள்ளார். இவர், 2024ம் ஆண்டு வரை இப்பதவியில் இருப்பார். 2024ம் ஆண்டு நவம்பரில் சந்திரசூட் ஓய்வு பெறும்போது, உச்ச நீதிமன்றத்தில் பெரும்பாலான நீதிபதிகளும் ஓய்வு பெற்று இருப்பார்கள். கடந்த 4ம் தேதி நீதிபதி சுபாஷ் ரெட்டி ஓய்வு பெற்றார்.

நீதிபதி வினித் சரண் மே 10ம் தேதியும், நீதிபதி நாகேஸ்வர ராவ் ஜூன் 7ம் தேதி, நீதிபதி கான்வீல்கர் ஜூலை 29ம் தேதி, நீதிபதி இந்திரா பானர்ஜி செப்டம்பர் 23ம் தேதியும், நீதிபதி ஹேமந்த் குப்தா அக்டோபர் 16ம் தேதியும் ஓய்வு பெற உள்ளனர். இதன் காரணமாக அனுமதிக்கப்பட்ட நீதிபதிகளின் எண்ணிக்கை 34க்கு பதிலாக பழையபடி 25 ஆக குறைந்துவிடும்.

இதன் காரணமாக, நிலுவை வழக்குகளின் எண்ணிக்கையும் உச்ச நீதிமன்றத்தில் அதிகரிக்கும் நிலை உருவாகி உள்ளது,. மேலும், இவர்கள் விசாரித்து வரும் வழக்குகளிலும் தீர்வு காண முடியாத நிலை உருவாகும். இவர்களுக்குப் பிறகு இந்த வழக்குகளை வேறு நீதிபதிகள் விசாரிக்கும்போது, ஆரம்பத்தில் இருந்து தொடங்க வேண்டிய சூழ்நிலை ஏற்படும். இதன் காரணமாக, வழக்குகளுக்கு தீர்வு காண்பதிலும் தாமதம் ஏற்படும் நிலை உருவாகும் என்று உச்ச நீதிமன்ற வழக்கறிஞர்கள் தெரிவித்தனர்.

தந்தை, மகன் சாதனை

*  உச்ச நீதிமன்றத்தில் ஏற்கனவே மூன்று கோடிக்கும் அதிகமான வழக்குகள் நிலுவையில் உள்ளன.

*  நீதிபதி சந்திரசூட்டின் தந்தையான யஷ்வந்த் விஷ்ணு சந்திரசூட்டும் உச்ச நீதிமன்ற தலைமை நீதிபதியாக இருந்தவர். உச்ச நீதிமன்ற வரலாற்றில் தந்தையும், மகனும் தலைமை நீதிபதி பதவியை அலங்கரிப்பது இதுவே முதல்முறை.

Related Stories: