நெல்லை: நெல்லை புதிய பஸ் நிலையத்தில் பஸ் டயர்களை பாதுகாக்க வேண்டி அதை நிறுத்தும் செவ்வக வடிவ இடத்தின் முனைகளில் உள்ள இரும்பை வெட்டி எடுத்துவிட்டு அப்பகுதியை வளைவாக்கும் பணி நடந்து வருகிறது. நெல்லை வேய்ந்தான்குளம் புதிய பஸ் நிலையம் சமீபத்தில் புதுப்ெபாலிவுடன் கட்டி முடிக்கப்பட்டு தமிழக முதல்வரால் காணொலிக்காட்சி மூலமாக திறந்து வைக்கப்பட்டது. புதிய பஸ் நிலையத்தில் மொத்தம் 6 நடைமேடைகள் உள்ளன. ஒவ்வொரு நடைமேடையிலும் 13 பஸ் நிறுத்தும் இடங்கள் வீதம் மொத்தம் 78 பஸ்களை நிறுத்துவதற்கான பஸ் கவுன்டர்கள் உள்ளது. பஸ் நிலையத்தில் இருந்து நெல்லை மாநகர், மாவட்டம், தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்கள் மற்றும் அண்டை மாநிலங்களுக்கும் தினமும் நூற்றுக்கணக்கான பஸ்கள் இயக்கப்பட்டு வருகின்றன. இந்நிலையில் இந்த பஸ் நிலையத்தில் பஸ்களை நிறுத்தும் கவுன்டர்களின் முனைகளில் உள்ள இரும்புக் கம்பியை வெட்டி எடுத்து அதை வளைவாக மாற்றி அமைக்கும் பணி நடந்து வருகிறது.