திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க போலி டிக்கெட்டுகள் விற்ற போலீஸ்காரர் உட்பட 7 பேர் கைது: விஜிலென்ஸ் அதிரடி

திருமலை: திருப்பதி ஏழுமலையானை தரிசிக்க ஆங்கில புத்தாண்டு தினத்தில் தெலங்கானாவை சேர்ந்த 4 பக்தர்கள் வந்தனர்.  அவர்கள் கொடுத்த ₹300 மதிப்புள்ள டிக்கெட்டுகளை தேவஸ்தான ஊழியர்கள் ஸ்கேன் செய்து பார்த்தபோது, போலி டிக்கெட்டுகள் என்பது தெரியவந்தது. இதுதொடர்பாக உடனே திருமலை முதலாவது போலீஸ் நிலையத்திற்கு தெரிவிக்கப்பட்டது. அதேநாளில் மத்திய பிரதேச மாநிலத்தை சேர்ந்த 3 பக்தர்களும் போலி டிக்கெட்டுடன் தரிசனம் செய்ய வந்தனர். அவர்களை திருமலை 2வது போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

அவர்களிடம் தேவஸ்தான விஜிலென்ஸ் போலீசார் விசாரணை நடத்தினர். விசாரணையில், 7 பக்தர்களிடம் இருந்து திருப்பதியில் சிலர் ₹300 தரிசன டிக்கெட்டை தலா ₹3 ஆயிரம் என ₹21 ஆயிரம் பெற்றுக்கொண்டு போலியாக விற்றது தெரியவந்தது. இதையடுத்து, கடந்த 2 நாட்களாக போலி டிக்கெட் விற்றவர்கள் குறித்து விஜிலென்ஸ் அதிகாரிகள் தீவிர விசாரணை நடத்தினர்.

அதில், போலி டிக்கெட் விற்றவர்கள் திருப்பதியை சேர்ந்த சிறப்பு அதிரடிப்படை காவலர் கிருஷ்ணாராவ், திருப்பதி லட்டு கவுன்டர் ஒப்பந்த ஊழியர் அருண், இடைத்தரகர்கள் பாலாஜி, ெசங்காரெட்டி, முன்னாள் டிக்கெட் கவுன்டர் ஏஜென்சி ஊழியர் நாகேந்திரா, தேவேந்திர பிரசாத், வெங்கட் என்பது தெரியவந்தது. இவர்கள் 7 பேரும் தெலங்கானா மற்றும் மத்திய பிரதேச பக்தர்களிடம் போலி டிக்கெட்டுகளை விற்று பணத்தை மோசடி செய்தது தெரியவந்தது. இதையடுத்து, விஜிலென்ஸ் போலீசார் வழக்குப்பதிந்து 7 பேரையும் கைது செய்து விசாரித்து வருகின்றனர்.

இடைத்தரகர்களை நம்பாதீர்

திருப்பதி தேவஸ்தானம் வெளியிட்ட அறிக்கை: ‘திருப்பதி ஏழுமலையான் கோயிலுக்கு tirupatibalaji.ap.gov.in என்ற தேவஸ்தான அதிகாரப்பூர்வ இணையத்தில் மட்டுமே டிக்கெட் முன்பதிவு செய்ய வேண்டும். சுவாமி தரிசனம் செய்ய இடைத்தரகர்களை நம்ப வேண்டாம்.  போலி டிக்கெட்டு விற்பவர்கள் மீதும் கடும் நடவடிக்கை எடுக்கப்படும்’.

Related Stories: