சென்னை: இலங்கை யாழ்பாணம் பல்கலைக்கழக மாணவர்களின் படுகொலையைக் கண்டித்து, நாம் தமிழர் கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளர் சீமான் தலைமையில் கடந்த 2016 அக்டோபர் மாதம் நுங்கம்பாக்கத்தில் உள்ள இலங்கைத் தூதரகம் முன்பு ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. இதையடுத்து, சீமான் மீது சட்டவிரோதமாக கூடுதல் உள்ளிட்ட பல்வேறு பிரிவுகளில் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இந்நிலையில் எழும்பூர் 14வது பெருநகர குற்றவியல் நடுவர் நீதிமன்றத்தில் விசாரணையில் உள்ளது. இந்த வழக்கில் முந்தைய விசாரணையின் போது ஆஜராகாததால் டிசம்பர் 15ம் தேதி சீமானுக்கு பிடி வாரண்ட் பிறப்பித்து எழும்பூர் நீதிமன்றம் உத்தரவிட்டிருந்தது. இதையடுத்து, நேற்று சீமான் எழும்பூர் நீதிமன்றத்தில் ஆஜரானார்.