அருப்புக்கோட்டை அருகே பரிதாபம் புரோட்டா சாப்பிட்ட கர்ப்பிணி சாவு-வயிற்றில் இருந்த சிசுக்களும் உயிரிழந்த சோகம்

அருப்புக்கோட்டை : அருப்புக்கோட்டை அருகே புரோட்டா சாப்பிட்ட 5 மாத கர்ப்பிணி பரிதாபமாக உயிரிழந்தார். அவரது வயிற்றில் இருந்த இரட்டை சிசுக்களும் உயிரிழந்தது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.விருதுநகர் மாவட்டம், அருப்புக்கோட்டை அருகே வதுவார்பட்டியை சேர்ந்தவர் சங்கன். கூலித்தொழிலாளி. இவருக்கும், மல்லாங்கிணறு அருகே திம்மம்பட்டியை சேர்ந்த அனந்தாயி (25) என்பவருக்கும் நான்கரை ஆண்டுகளுக்கு முன் திருமணம் நடந்தது. 2 வயதில் பெண் குழந்தை உள்ளது. அனந்தாயி மீண்டும் கர்ப்பம் அடைந்தார். 5 மாத கர்ப்பமாக இருந்தபோது, ஸ்கேன் எடுத்து பார்த்ததில் இரட்டை குழந்தை இருப்பது தெரிய வந்தது.

 நேற்று முன்தினம் இரவு அனந்தாயி இப்பகுதியிலுள்ள ஓட்டலில் புரோட்டா வாங்கி சாப்பிட்டார். இதன்பிறகு அவருக்கு வயிற்றுப்போக்கு ஏற்பட்டது. இதையடுத்து அவரை சிகிச்சைக்காக அருப்புக்கோட்டை அரசு மருத்துவமனையில் சேர்த்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று அதிகாலை மூச்சுத்திணறல் ஏற்பட்டு அனந்தாயி பரிதாபமாக உயிரிழந்தார். பிரேத பரிசோதனையில் அவரது வயிற்றில் இரட்டை ஆண் சிசுக்கள் இறந்த நிலையில் இருந்தது தெரிய வந்தது.

அருப்புக்கோட்டை ஆர்டிஓ கல்யாணகுமார், டிஎஸ்பி (பொ) மதியழகன் ஆகியோர் அனந்தாயி பெற்றோரிடம் விசாரணை நடத்தினர். இதில் புரோட்டா சாப்பிட்டதில் அனந்தாயி இறந்ததாக தெரிவித்தனர். இதுகுறித்து பந்தல்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரிக்கின்றனர். புரோட்டா சாப்பிட்ட கர்ப்பிணி மூச்சு திணறி உயிரிழந்த சம்பவம் கிராம மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

Related Stories: