முதல் இன்னிங்சில் 62 ரன்னுக்கு சுருண்டது மிகுந்த பின்னடைவு: நியூசி. கேப்டன் டாம் லதாம் பேட்டி

மும்பை: இந்தியா வந்த நியூசிலாந்து அணி மூன்று 3 டி20 போட்டி தொடர், இரண்டு டெஸ்ட் போட்டி தொடரில் பங்கேற்று விளையாடியது. இதில் டி20 தொடரில் இந்தியா 3-0 என்ற கணக்கில் வெற்றிபெற்ற நிலையில் அடுத்து டெஸ்ட் தொடர் நடைபெற்றது. கான்பூரில் நடைபெற்ற முதல் டெஸ்டில் இந்தியா, நியூசிலாந்து இடையே கடும் போட்டி நிலவி டிரா ஆனது. மும்பை வான்கடே ஸ்டேடியத்தில் 2வது டெஸ்டில் இந்திய அணி முழு ஆதிக்கம் செலுத்தி 372 ரன்கள் வித்தியாசத்தில் சாதனை வெற்றி பெற்று, 1-0 என தொடரைக் கைப்பற்றியது. நியூசிலாந்து அணியின் படுதோல்வி குறித்து அந்த அணி  கேப்டன் டாம் லதாம் கூறுகையில் “2வது டெஸ்டில் நாங்கள் விளையாடிய விதம் மிகுந்த ஏமாற்றத்தை தந்துள்ளது. இந்திய அணியினர் சிறப்பாக செயல்பட்டனர். அவர்களுக்கு எங்களது வாழ்த்துக்கள்.

இந்த வெற்றியை பெற இந்திய அணியினர் தகுதியானவர்கள். அவர்கள் அனைவரும் சிறப்பாகச் செயல்பட்டனர். இதுபோன்ற மைதானங்களில் முதலில் பேட்டிங் செய்வதே சிறப்பாக இருக்கும். முதலில் பேட்டிங் செய்திருந்தால் வெற்றி வாய்ப்பு இருந்திருக்கும் என நினைக்கிறோம். இருப்பினும் எங்கள் அணி வீரர்கள் முடிந்தவரை போராடினர். முதல் இன்னிங்ஸில் 62 ரன்களுக்குள் அனைவரும் ஆட்டம் இழந்ததே பெரிய பின்னடைவாக அமைந்துவிட்டது. அஜாஸ் படேலுக்கு இந்த தொடர் மிகச் சிறப்பானதாக இருந்தது. அடுத்ததாக வங்கதேசத்திற்கு எதிராக நடைபெற உள்ள போட்டிகளுக்கு தயாராவோம்” என்றார்.

Related Stories: