அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சூகிக்கு 4 ஆண்டுகள் சிறை: மியான்மர் நீதிமன்றம் உத்தரவு

மியான்மர்: மியான்மர் நாட்டின் ஜனநாயக கட்சி தலைவர் ஆங்சாங் சூ கி தலைமையிலான ஆட்சியை கடந்த பிப்ரவரியில் அந்நாட்டு ராணுவம் கைப்பற்றியது. தற்போது, ஆங்சாங் சூ கி, ராணுவத்தால் தடுப்பு காவலில் வைக்கப்பட்டுள்ளார். இந்நிலையில் அவர் ராணுவத்திற்கு எதிராக அதிருப்தியை தூண்டியதற்காகவும், கொரோனா விதிகளை மீறியதற்காகவும் பதவி நீக்கம் செய்யப்பட்டதாக ராணுவம் அறிவித்தது. இதற்கிடைய ஆங் சான் சூகிக்கு எதிரான வழக்கை மியான்மர் நீதிமன்றம் விசாரித்தது. அவருக்கு இன்று நான்கு ஆண்டுகள் சிறைத்தண்டனை விதித்து நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

இதுகுறித்து ஆங்சான் சூகியின் ஆதரவாளர்கள் கூறும்போது, இந்த வழக்குகள் ஆதாரமற்றவை என்றும், ராணுவம் அதிகாரத்தை பலப்படுத்தும் அதே வேளையில் அவரது அரசியல் வாழ்க்கையை முடிவுக்கு கொண்டு வருவதற்காக வடிவமைக்கப்பட்டதாக கூறினர். இதுகுறித்து ராணுவ அரசு செய்தித் தொடர்பாளர் ஜோ மின் துன் கூறுகையில், ‘ஆங்சாங் சூகியின் மீது பிரிவு 505 (பி)-ன் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும், இயற்கை பேரிடர் சட்டத்தின் கீழ் இரண்டு ஆண்டுகள் சிறை தண்டனையும் விதிக்கப்பட்டுள்ளது’ என்று கூறினார்.

Related Stories: