ஆவடி- அண்ணனூர் இடையே மின்சார ரயிலில் சிக்கி மாடுகள் பலி: ஒரு மணிநேரம் ரயில் சேவை பாதிப்பு

ஆவடி: ஆவடி- அண்ணனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே தண்டவாளத்தை கடக்கு முயன்ற  மாடுகள், ரயிலில் சிக்கி அடிபட்டு இறந்தன. சென்னையில் இருந்து அரக்கோணம் மார்க்கத்துக்கு தினமும் 100க்கும் மேற்பட்ட மின்சார ரயில் சேவைகள் இயக்கப்படுகின்றன. திருவள்ளூரில் இருந்து சென்னை நோக்கி மின்சார ரயில் பயணிகளை நேற்று மாலை 6 மணிக்கு வந்து கொண்டிருந்தது. ஆவடி - அண்ணனூர் ரயில் நிலையங்களுக்கு இடையே ரயில் சென்று கொண்டிருந்தது.

அப்போது, 2 காளை மாடுகள் தண்டவாளத்தை கடக்க முயன்றன. அதன் மீது, ரயில் மோதி 2 மாடுகளும் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தன. அந்த மாடுகளின் உடல்  உறுப்புகள் இன்ஜினில் சிக்கி கொண்டன. இதனால், மின்சார ரயிலில் பழுது ஏற்பட்டு நடுவழியில் நின்றது. மேலும், அரக்கோணத்தில் இருந்து சென்னை வர வேண்டிய ரயில்கள் ஆவடி, திருநின்றவூர், திருவள்ளூர் ஆகிய ரயில் நிலையங்களில் நிறுத்தப்பட்டன. இதனால், சென்னை செல்லும் மார்க்கத்தில் ரயில் போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டது.

 தகவலறிந்து ஆவடி ரயில்வே ஊழியர்கள், சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து ரயிலில் சிக்கிய 2 காளை மாடுகளையும் மீட்டனர். இதன் பிறகு, மின்சார ரயிலின் பழுது நீக்கி ரயில் அங்கிருந்து புறப்பட்டு சென்றது. மேலும், ஆங்காங்கே நிறுத்தப்பட்ட மின்சார ரயில்களும் புறப்பட்டு சென்னை நோக்கி சென்றன. ஆவடி அருகே ரயிலில் மாடுகள் சிக்கி இறந்ததால் சுமார் அரைமணி நேரத்துக்கு மேல் ரயில் போக்குவரத்து பாதித்தது.

Related Stories: