திருமலை: திருப்பதி ஏழுமலையான் கோயில் சிறப்பு அதிகாரியான ‘டாலர்’ சேஷாத்ரி நேற்று அதிகாலை மாரடைப்பால் மரணம் அடைந்தார். ஆந்திர மாநிலம் விசாகப்பட்டினத்தில் உள்ள ஏழுமலையான் கோயிலில் திருமலை திருப்பதி தேவஸ்தானம் சார்பில் நேற்று மாலை கார்த்திகை தீபத்திருவிழாவும், கல்யாண உற்சவமும் நடைபெற இருந்தது. இதில் பங்கேற்க திருப்பதி ஏழுமலையான் கோயில் சிறப்பு அதிகாரி ‘டாலர்’ சேஷாத்ரி என்கிற பாலசேஷாத்ரி(74) கடந்த 27ம் தேதி விசாகப்பட்டினம் சென்றார். நேற்று அதிகாலை 4 மணியளவில் அவருக்கு திடீரென மாரடைப்பு ஏற்பட்டுள்ளது. இதைக்கண்ட தேவஸ்தான அதிகாரிகள், உடனே அவரை மருத்துவமனைக்கு கொண்டு செல்ல முயன்றனர். அதற்குள் அவர் மரணமடைந்தார்.