தொம்பரம்பேடு கிராமத்தில் மகா கால பைரவர் ஜெயந்தி விழா

ஊத்துக்கோட்டை: ஊத்துக்கோட்டை அருகே தொம்பரம்பேடு கிராமத்தில் ஸ்ரீமகா கால பைரவர் கோயில் உள்ளது. இக்கோயிலின் பைரவர் ஜெயந்தி விழா நேற்று முன்தினம் மாலை காப்பு கட்டி கலச ஸ்பான நிகழ்ச்சியுடன் தொடங்கியது. நேற்று  காலை 6 மணிக்கு கணபதி ஹோமம் மற்றும் பூஜைகள், பின்னர் 64 கலச பைரவ ஆராதனை, 64 பைரவ ஹோமம் பூர்ணாஹூதி நடைபெற்றது. இதனைத்தொடர்ந்து 7 மணிக்கு பெருமாள் கோயிலிலிருந்து ஆபரணப்பெட்டியில் வெள்ளி கவசம் எடுத்துக்கொண்டு, திருக்குடை ஏந்தி, பெண்கள் தலையில் பால்குடம் ஏந்தியும் கோயிலுக்கு ஊர்வலமாக சென்று பைரவருக்கு பாலாபிஷேகம் செய்தனர்.

அன்று 8 மணி அளவில் 64 கலச புறப்பாடு, கலச அபிஷேகம், பைரவருக்கு வெள்ளிக்கவசம் சாற்றி சிறப்பு தீபாராதனையும், 11 மணிக்கு உற்சவருக்கு திருக்குடை சாற்றி ஊஞ்சல் சேவை நிகழ்ச்சியும் நடைபெற்றது. பிற்பகல் 3 மணிக்கு பைரவ பீஜாசரவ ஹோமம், பின்னர் மகா பூர்ணாஹூதி, நவ பைரவ கலச புறப்பாடு அஷ்டபைரவர், ஆதி பைரவருக்கு பால், தயிர், பன்னீர் சந்தனம் மற்றும்  சிறப்பு திரவிய அபிஷேகம் சிறப்பு மகா தீபாராதனையும் நடைபெற்றது. இந்த விழாவிற்கு தொம்பரம்பேடு, ஊத்துக்கோட்டை மற்றும் அதை சுற்றியுள்ள பகுதிகளை சேர்ந்த  பக்தர்கள் கலந்துகொண்டனர்.

Related Stories: