தேனி: தேனி மாவட்டம் போடி அருகே மலைச்சாலையில் தொடர் நிலச்சரிவு காரணமாக தமிழ்நாடு - கேரளா இடையிலான வாகன போக்குவரத்து முற்றிலும் பாதிக்கப்பட்டுள்ளது. மேலடுக்கு சுழற்சி காரணமாக தேனி மாவட்டத்தில் கடந்த 2 தினங்களாக பலத்த மழை பெய்து வருகிறது. இதனால் போடி மெட்டு மலைச்சாலை பகுதியில் பல்வேறு இடங்களில் நிலச்சரிவு ஏற்பட்டுள்ளது. குறிப்பாக முந்தல் சோதனை சாவடியில் இருந்து கேரளா செல்லும் சாலையில் 8, 9 மற்றும் 10வது கொண்டை ஊசி வளைவுகள் அருகே பாறைகளும், மரங்களும் சாலையில் சரிந்து கிடக்கின்றன. இதன் காரணமாக கேரளாவுக்கு வாகனங்கள் செல்ல தடை விதிக்கப்பட்டுள்ளதால் அடிவார பகுதியான முந்தல் சோதனை சாவடியில் ஜீப்புகள் உள்பட 200க்கும் மேற்பட்ட வாகனங்கள் அணிவகுத்து நிற்கின்றன.