திருவள்ளூர்: தமிழகம் உட்பட 5 மாநிலங்களில் விரைவில் சட்டசபை தேர்தல் தேதி அறிவிக்கப்பட உள்ளது. இதை முன்னிட்டு தேர்தல் நடத்தை விதிமுறைகளும் அமலுக்கு வந்துவிடும். இந்த நிலையில், தேர்தல் பணிக்கு உத்தரபிரதேசத்தில் இருந்து சிறப்பு ரயில் மூலம் சென்னை பெரம்பூருக்கு உதவி கமாண்டர் காரத்திகேயன் தலைமையில் 90 துணை ராணுவப்படையினர் திருவள்ளூருக்கு வருகை வந்தனர். இவர்கள் கனகவல்லிபுரம் காவல் பயிற்சி பள்ளியில் தங்கவைக்கப்பட்டுள்ளனர்.
இந்தநிலையில் கடந்த 2 நாட்களுக்கு முன்பு திருவள்ளூரில் துணை ராணுவப் படையினர் அணிவகுப்பு மேற்கொண்டனர். கடம்பத்துார் ஒன்றியத்தில் பதற்றமான ஓட்டுச்சாவடியாக அறிவிக்கப்பட்ட பாப்பரம்பாக்கம், மணவாளநகரில் நேற்றுமுன்தினம் துணை ராணுவப்படையினர் அணிவகுப்பு நடத்தினர்.
நேற்று காக்களூர் எடை மேடை முதல் காக்களூர் தேர்தல் நடைபெறும் மையம் வரையும் திருப்பாச்சூர் கூட்டுச்சாலை முதல் திருப்பாச்சூர் பெட்ரோல் பங்க் வரையும் மாவட்ட கூடுதல் எஸ்பி கலியன், போலீஸ் டிஎஸ்பி தமிழரசி, போலீஸ் இன்ஸ்பெக்டர்கள் திருவள்ளூர் தாலுகா விஜயகுமார், கடம்பத்தூர் பரந்தாமன், மப்பேடு சீத்தாபதி, சப் இன்ஸ்பெக்டர் கோபி கிருஷ்ணன் முன்னிலையில் 20 போலீசாருடன் உதவி கமாண்டர் கார்த்திகேயன் தலைமையில் 90 துணை ராணுவ வீரர்கள் அணிவகுப்பு நடத்தினர்.
