பிரியங்கா சோப்ரா விவாகரத்து? சமூக வலைத்தளங்களில் கணவர் பெயரை நீக்கியதால் பரபரப்பு

மும்பை: மாடலிங் மூலம் பிரபலமான பிரியங்கா சோப்ரா (39), கடந்த 2000ம் ஆண்டில் உலக அழகி பட்டம் வென்றார். 2002ல் தமிழில் விஜய் ஜோடியாக ‘தமிழன்’ படத்தில் ஹீரோயினாக அறிமுகமானார். இதில் டி.இமான் இசையில் ‘உள்ளத்தை கிள்ளாதே’ என்ற பாடலை விஜய்யுடன் இணைந்து சொந்தக்குரலில் பாடினார். 2003ல் ‘தி ஹீரோ: லவ் ஸ்டோரி ஆப் எ ஸ்பை’ என்ற படத்தின் மூலம் பாலிவுட்டில் அறிமுகமானார். ஹாலிவுட் படம் மற்றும் டி.வி தொடரிலும் நடித்து முன்னணி நடிகைகளில் ஒருவராக உயர்ந்தார். கடந்த 2019 டிசம்பர் மாதம் வெளிநாட்டை சேர்ந்த பாடகரும், பாடலாசிரியரும், நடிகருமான நிக் ஜோனசை (29) காதலித்து திருமணம் செய்துகொண்ட அவர், கணவருடன் அமெரிக்காவில் குடியேறி ஹாலிவுட் படங்களில் நடித்து வருகிறார்.

முன்னதாக, திருமணம் முடிந்து 3 மாதங்களிலேயே பிரியங்கா சோப்ராவுக்கும், நிக் ஜோனசுக்கும் இடையே கருத்து வேறுபாடு ஏற்பட்டு விவாகரத்து செய்துகொள்ள தயாராகி வருவதாக, லண்டன் பத்திரிகையில் செய்தி வெளியானது. இதுகுறித்து பிரியங்கா சோப்ராவின் செய்தி தொடர்பாளர், ‘விவாகரத்து செய்தியில் உண்மை இல்லை. அது வதந்தி’ என்று மறுத்தார். இந்நிலையில், தற்போது மீண்டும்  அதுபோல் விவாகரத்து குறித்த செய்திகள் வெளியாகி வருகின்றன.  இது ஒட்டுமொத்த படவுலகிலும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. இதற்கு காரணம், பிரியங்கா சோப்ரா தனது கணவர் நிக் ஜோனஸ் பெயரை தனது சமூக வலைத்தளங்களில் இருந்து நீக்கியிருப்பது என்று கூறப்படுகிறது. 70.5 மில்லியன் பாலோயர்களை கொண்ட இன்ஸ்டாகிராம் பக்கத்திலும், 27.4 மில்லியன் பாலோயர்களை கொண்ட டிவிட்டர் பக்கத்திலும் இருந்து நிக் ஜோனஸ் பெயரை பிரியங்கா சோப்ரா நீக்கியுள்ளார்.

கடந்த சில மாதங்களாகவே பிரியங்கா சோப்ரா, நிக் ஜோனஸ் இடையே சுமூகமான உறவு இல்லை என்றும், தங்களது பணிகள் மற்றும் விருந்து நிகழ்ச்சிகளுக்கு செல்வது போன்ற விஷயங்களில் இருவருக்கும் ஒருமித்த கருத்து இல்லை என்றும் கூறப்படுகிறது. தனது கட்டுப்பாட்டில் நிக் ஜோனசை வைத்துக்கொள்ள முடியவில்லை என்று பிரியங்கா சோப்ரா வருத்தப்படுகிறாராம். அதுபோல், திருமணத்துக்கு முன்பு அமைதியானவராக இருந்த பிரியங்கா சோப்ரா, தற்போது கடுமையான கோபக்காரராக மாறியிருப்பது நிக் ஜோனஸ் குடும்பத்தினருக்கு பிடிக்கவில்லையாம். இதனால் கணவனும், மனைவியும் விவாகரத்துக்கு தயாராகி வருகிறார்கள் என்று தகவல்கள் வெளியாகியுள்ளது. இதுகுறித்து பிரியங்கா சோப்ராவின் தாயார் மது சோப்ரா கூறுகையில், ‘எல்லாமே வதந்திகள்தான்.  எனவே, வதந்திகளை பரப்ப வேண்டாம்’ என்று கூறியுள்ளார்.

சமீபத்தில் நடிகை சமந்தா தனது காதல் கணவரும், தெலுங்கு நடிகருமான நாக சைதன்யாவை விவாகரத்து செய்வதாக அறிவித்திருந்தார். இந்த அறிவிப்பு வெளியாவதற்கு சில மாதங்களுக்கு முன்பு, தன் பெயருக்குப் பின்னால் இருந்த தனது கணவரின் குடும்பப்பெயரான அக்கினேனி என்பதை தனது சமூக வலைத்தளங்களில் இருந்து சமந்தா நீக்கியிருந்தது குறிப்பிடத்தக்கது. இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு நிக் ஜோனஸ் உடற்பயிற்சி செய்யும் வீடியோவை இன்ஸ்டாகிராமில் வெளியிட்டுள்ளார். அதற்கு பிரியங்கா சோப்ரா, ‘உன்னிடத்தில் என்னை தொலைத்துவிட்டேன்’ என்று காதல் பொங்கி வழிய கமென்ட் செய்து,  விவாகரத்து வதந்திகளுக்கு முற்றுப் புள்ளி வைத்துள்ளார்.

Related Stories: