திருவண்ணாமலை: திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் பக்தர்களுக்கு அனுமதி மறுக்கப்பட்டுள்ளதால், கோயில் பிரகாரம் வெறிச்சோடி காணப்பட்டது. பாதுகாப்பு பணிக்காக போலீஸ் குவிக்கப்பட்டுள்ளனர். திருவண்ணாமலை அண்ணாமலையார் கோயிலில் கார்த்திகை தீபத்திருவிழாவின் முக்கிய நிகழ்வான மகாதீப பெருவிழா நாளை நடைபெறுகிறது. அதையொட்டி, 2,668 அடி உயர மலை மீது நாளை மாலை 6 மணிக்கு மகா தீபம் ஏற்றப்படுகிறது. வழக்கமாக தீபத்திருவிழாவை தரிசிக்க நாட்டின் பல்வேறு பகுதிகளில் இருந்தும், வெளி நாடுகளில் இருந்தும் லட்சக்கணக்கான பக்தர்கள் திருவண்ணாமலையில் திரள்வது வழக்கம். ஆனால், கொரோனா தொற்று பரவலை கட்டுப்படுத்த தொடர்ந்து 2வது ஆண்டாக தீபத்திருவிழாவில் பக்தர்கள் பங்கேற்க அனுமதி மறுக்கப்பட்டுள்ளது. மேலும், கடந்த ஆண்டு விதிக்கப்பட்ட கட்டுப்பாடுகளைவிட, இந்த ஆண்டு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ளது. அதேபோல், வழக்கத்தைவிட போலீஸ் பாதுகாப்பு ஏற்பாடுகள் செய்யப்பட்டுள்ளன. அண்ணாமலையார் கோயில் மட்டுமின்றி திருவண்ணாமலை நகர் முழுவதும் போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.