பிறந்த நாள் கொண்டாட்டத்தில் பட்டா கத்தியால் கேக் வெட்டிய 4 பேர் கைது

பல்லாவரம்: பல்லாவரம் அடுத்த திருநீர்மலை, திருமங்கையாழ்வார்புரம், ரெட்டைமலை சீனிவாசன் தெருவை சேர்ந்தவர் உதயகுமார் (26). இவர் அதே பகுதியில் சரக்கு வாகன ஓட்டுநராக பணிபுரிந்து வருகிறார். நேற்று முன்தினம் இவருக்கு பிறந்தநாள் என்பதால், நண்பர்களுடன் கொண்டாட முடிவு செய்தார். இதற்காக, நண்பர்கள் 10 பேரை நேற்று முன்தினம் இரவு தனது வீட்டிற்கு அழைத்துள்ளார்.

பின்னர், நண்பர்கள் புடைசூழ பெரிய பட்டாக் கத்தியால் பிறந்தநாள் கேக் வெட்டினார். அதனை செல்போனில் வீடியோ எடுத்து, சமூக வலைதளங்களில் பதிவிட்டார். இதுபற்றி அறிந்த சங்கர் நகர் போலீசார், வழக்குப் பதிவு செய்து உதயகுமார், அவரது நண்பர்களான அதே பகுதியைச் சேர்ந்த ரோகித் (27), அரசு (19), சேரன் (21) ஆகிய 4 பேரை நேற்று கைது செய்தனர். மேலும் தலைமறைவாக உள்ள சதீஷ், தேவராஜ், யுவராஜ் உள்ளிட்ட 6 பேரை தேடி வருகின்றனர். பட்டா கத்தியால் வாலிபர் கேக் வெட்டிய சம்பவம் அப்பகுதியில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: