போலி ஆவணங்கள் மூலம் பல லட்ச மதிப்பிலான நிலத்தை அபகரிக்க முயன்ற பெண் உட்பட 3 பேர் கைது

திண்டுக்கல்: எவ்வித சம்பந்தமும் இல்லாமல் சென்னையிலுள்ள ஒருவரது பல லட்ச மதிப்பிலான நிலத்தை போலி ஆவணங்கள் மூலம் அபகரிக்க முயன்ற கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். கொடைக்கானல் சார்பதிவாளரின் சமயோஜித நடவடிக்கையால் பெண் ஒருவர் உட்பட 3 பேர் தற்போது சிறையில் கம்பி எண்ணுகின்றனர். கொடைக்கானலை சேர்ந்தவர் ரவி, இவர் ராமசாமி என்பவருக்கு சொந்தமான சென்னை கொளத்தூர் திருமாள்புரம் பகுதியிலுள்ள ஒரு கிரௌண்ட் நிலத்தை போலி ஆவணம் மூலம் தனது கூட்டாளிகளுடன் சேர்ந்து அபகரிக்க திட்டம் தீட்டினார்.

இதற்காக நிலதிற்கு சொந்தக்காரரான ராமசாமி கொடைக்கானலில் வசிப்பதை போன்று போலி ஆவணங்களை தயாரித்துள்ளார். இதையடுத்து ராமசாமியாக தன்னை அடையாள படுத்திகொண்டு பத்திர பதிப்பு அலுவலகத்தை நாடியுள்ளார். தனது பேரன் ராமேசுக்கு கொளத்தூர் திருமாள்புரதிலுள்ள ஒரு கிரௌண்ட் நிலத்தை பாதுகாக்கவும் பராமரித்து விற்கவும் பவர் கொடுப்பதை குறிப்பிட்டு கொடைக்கானல் சார்பதிவாளர் அலுவலகத்தில் கடந்த 13ம் தேதி போலியான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளார்.

அதனை ஆய்வு செய்த கொடைக்கானல் சார்பதிவாளர் ராஜேஷ்குமாருக்கு பல சந்தேகங்கள் எழுந்தன. இதையடுத்து நிலத்தின் உண்மையான உரிமையலரான ராமசாமியை தொடர்பு கொண்டு பவர் பத்திரம் தொடர்பாக ரகசியமாக விசாரித்துள்ளார். அவர் அது போன்று எந்தவிதமான நடவடிக்கையும் மேற்கொள்ளவில்லை என கூறியதால் அதிர்ச்சியடைந்த சார்பதிவளர் ரவியை கையும் களவுமாக கொடைக்கானல் போலீசாரிடம் பிடித்து கொடுத்தார்.

விசாரணையில் மதுரையை சேர்ந்த ராம்குமார், தஞ்சை மாவட்டத்தை சேர்ந்த ரமேஷ், கொடைக்கானல் பகுதியை சேர்ந்த ராஜலக்ஷ்மி ஆகிய மூவரும் மோசடியில் ஈடுபட்டது தெரிய வந்தது. மூவரையும் கொடைக்கானல் நடுவர் நீதி மன்றத்தில் ஆஜர்படுத்தி போலீசார் சிறையில் அடைத்தனர்.

அவர்களிடம் போலீசார் நடத்திய விசாரணையில் இந்த போலி ஆவண மோசடி கும்பலின் தலைவன் ரவி என்பதும் அவருக்கு உதவியாக இவர்கள் மூவரும் செயல்பட்டு வந்ததும் தெரியவந்துள்ளது. மொத்தத்தில் போலி ஆவணங்கள் மூலம் நடக்கும் நில அபகரிப்பு மோசடிகளை களைய கொடைக்கானல் சார்பதிவாளரின் இந்த நடவடிக்கை முன்னுதாரமாக இருக்கிறது.

Related Stories: