சிவகாசி: திருத்தங்கல் நகராட்சி, சிவகாசி நகராட்சியோடு இணைக்கப்பட்டு சிவகாசி மாநகராட்சியாக அரசாணை வெளியிட்டப்பட்டதால் 55 ஆண்டு காலம் திருத்தங்கல் நகராட்சியின் நிர்வாகம் முடிவுக்கு வந்தது.சிவகாசி நகராட்சியில் இருந்து 4 கிலோ மீட்டர் தூரத்தில் உள்ளது திருத்தங்கல் நகரம். 108 வைணவ திவ்ய தேசங்களில் 91வது திவ்ய தேசமான நின்ற நாராயண பெருமாள் கோயில் இங்குதான் உள்ளது. கருநெல்லிநாதர் சுவாமி கோயில், நின்ற நாராயண பெருமாள் கோயில், முருகன் கோயில் ஆகியவை ஒரே மலையில் அருகருகே அமைந்துள்ளதால் சைவ- வைணவ ஒற்றுமைக்கு எடுத்துகாட்டாக திருத்தங்கல் உள்ளது. இது ஒரு கோயில் நகரம் என்றும் அழைக்கப்படுகிறது. சிறப்பு வாய்ந்த இந்த திருத்தங்கல் நகரம் 15.4.1966ல்தான் முதல்நிலை பேரூராட்சியாக அறிவிக்கப்பட்டது. 22.12.1981ல் தேர்வு நிலை பேரூராட்சியாக தரம் உயர்த்தப்பட்டது. 24.8.2004ல் மூன்றாம் நிலை நகராட்சியானது. 9.8.2010ல் முதல்நிலை நகராட்சியானது. 13 சதுர கி.மீ பரப்பளவு கொண்ட இந்த இந்த நகராட்சியில் சுமார் 70 ஆயிரம் பொதுமக்கள் வசித்து வருகின்றனர்.