பூந்தமல்லியில் ரூ.1.70 கோடியில் சாலை பணிகள்: ஒன்றியக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றம்

பூந்தமல்லி: பூந்தமல்லி வட்டார வளர்ச்சி அலுவலக கூட்டரங்கில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் கூட்டம் நேற்று நடந்தது. இதில் ஒன்றியக்குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் தலைமை வகித்தார். ஒன்றியக்குழு துணைத் தலைவர் பரமேஸ்வரி கந்தன், வட்டார வளர்ச்சி அலுவலர்கள் ஜி.பாலசுப்பிரமணியம், எஸ்.அமிழ்தமன்னன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். இதில் ஒன்றியக்குழு உறுப்பினர்கள் ஆர்.யமுனா ரமேஷ், கே.சுரேஷ்குமார், க.பத்மாவதி கண்ணன், லோ.ஜெயஸ்ரீ லோகநாதன், வழக்கறிஞர் என்.பி.மாரிமுத்து, எம்.சத்யபிரியா முரளிகிருஷ்ணன், எஸ்.சிவகாமி சுரேஷ், எஸ்.பிரியா செல்வம், எஸ்.உமா மகேஸ்வரி சங்கர், பி.டில்லிகுமார், வி.கன்னியப்பன், எம்.கண்ணன் கேஜிடி.கௌதமன் உட்பட பலர் கலந்துகொண்டனர்.

இதில், நேமம் ஊராட்சியில் புதிதாக கட்டிய இ-சேவை மையம் பயன்பாட்டுக்கு கொண்டு வரவில்லை. குத்தம்பாக்கம் கிராமத்தில் அரசு நடுநிலைப் பள்ளி பழுதடைந்துள்ளது. உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என ஒன்றியக்குழு உறுப்பினர் என்.பி.மாரிமுத்து கூறினார். பின்னர் ஒன்றியக்குழு உறுப்பினர் சத்தியபிரியா முரளிகிருஷ்ணன் பேசுகையில், `மேல்மணம்பேடு கிராமத்தில் அரசு நடுநிலை பள்ளி கட்டிடம் பழுதடைந்துள்ளது. இவற்றை அகற்றி, அங்கு புதிய கட்டிடம் கட்ட உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும்’ என வலியுறுத்தினார்.

பின்னர் ஒன்றியக்குழு தலைவர் பூவை எம்.ஜெயக்குமார் பேசுகையில், `ஒன்றியக்குழு உறுப்பினர்களின் கோரிக்கைகள் மீது விரைவில் உரிய நடவடிக்கை எடுக்கப்படும். மேலும், அனைத்து ஊராட்சிகளிலும் பழுதடைந்த சாலைகளை சீரமைத்து புதிய சாலைகள் அமைப்பது, பழுதடைந்த அரசு பள்ளிக் கட்டிடங்களை சீரமைக்கப்படும்’ என உறுதி கூறினார். இதில், ரூ.1.70 கோடி மதிப்பீட்டில் புதிய தார்ச்சாலைகள் அமைப்பது உள்பட பல்வேறு தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.

Related Stories: