சுகாதாரப்பணி துணை இயக்குனர் வைத்திருந்த வங்கி லாக்கரில் 160 சவரன் ரூ.29.8 லட்சம் பறிமுதல்: லஞ்ச ஒழிப்பு போலீசாரிடம் சிக்கியது

காஞ்சிபுரம்: காஞ்சிபுரம் மாவட்ட சுகாதாரப்பணி துணை இயக்குனர் வங்கி லாக்கரில் இருந்து, 160 சவரன் தங்க நகைகள், ரூ.29.8 லட்சம் பறிமுதல் செய்யப்பட்டது. காஞ்சிபுரம் ரயில்வே சாலையில் அரசு தலைமை மருத்துவமனை அருகே சுகாதார நலப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகம் அமைந்துள்ளது. இதன்கீழ் காஞ்சிபுரம் மாவட்டத்தில் உள்ள அனைத்து ஆரம்ப சுகாதார நிலையங்களும் செயல்படுகின்றன. காஞ்சிபுரம் மாவட்டத்தில் பள்ளி, கல்லூரிகள் மற்றும் பிற நிறுவனங்களுக்கு சுகாதார சான்றிதழ் வழங்க, சுகாதார நலப் பணிகள் துணை இயக்குனர் அலுவலகத்தில் லஞ்சம் வாங்குவதாக லஞ்ச ஒழிப்புத்துறை போலீசாருக்கு தகவல் கிடைத்தது.

அதன்பேரில், காஞ்சிபுரம் மாவட்ட லஞ்ச ஒழிப்பு டிஎஸ்பி கலைச்செல்வன் தலைமையில் கடந்த 18ம் தேதி போலீசார் அதிரடி சோதனை நடத்தினர். அப்போது, சுகாதாரத்துறை துணை இயக்குனர் பழனியிடம் ரூ.1,66,910 ரொக்கம், ஸ்ரீ பெரும்புதூர் வட்டார சுகாதார மேற்பார்வையாளர் சீனிவாசனிடம் ரூ.26,49, காஞ்சிபுரம் வட்டார சுகாதார அலுவலர் இளங்கோவிடம் ரூ.8,900 என கணக்கில் வராத ரூ.2,02,300  ரொக்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதை தொடர்ந்து சுகாதாரத்துறை துணை இயக்குநர் பழனியிடம், லஞ்ச ஒழிப்புத் துறை போலீசார் தீவிரமாக விசாரித்தனா். மேலும், நீதிமன்றத்தின் மூலம் சர்ச் வாரண்ட் பெற்று சுகாதாரத்துறை துணை இயக்குநர் பழனி கணக்கு வைத்துள்ள சென்னை திருமங்கலத்தில் உள்ள தனியார் வங்கியின் லாக்கரை ஆய்வு செய்தனர். அதன்படி, இன்ஸ்பெக்டர் கீதா, பழனியின் லாக்கரை ஆய்வு செய்தபோது, கணக்கில் வராத ரூ.29,80,500, ரூ.75 லட்சம் மதிப்புள்ள 160 சவரன் நகைகள் கண்டெடுக்கப்பட்டது. தொடர்ந்து, விசாரணை நடந்து வருகிறது.

Related Stories: