அரசு வேலை வாங்கி தருவதாக ரூ.77 லட்சம் மோசடி!: முன்னாள் முதல்வர் எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளர் உள்பட 2 பேர் மீது போலீஸ் வழக்கு..!!

சேலம்: அரசு வேலை வாங்கி தருவதாக கூறி பல லட்சம் ரூபாய் வசூலித்து மோசடியில் ஈடுபட்டதாக அளிக்கப்பட்ட புகாரில் முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளர் உள்பட 2 பேர் மீது சேலத்தில் போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். சேலம் மாவட்டம் ஓமலூர் அருகே நடுபட்டியை சேர்ந்தவர் மணி. முன்னாள் முதலமைச்சர் எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளராக உள்ளார். இவர் மூலம் அரசு வேலை வாங்கி தருவதாக கூறி ஓமலூர் செம்மாண்டப்பட்டியை சேர்ந்த செல்வகுமார் என்பவர் பலரிடம் பணம் வசூலித்து மணியிடம் கொடுத்ததாக கூறப்படுகிறது.

இதன்படி போக்குவரத்து கழகத்தில் உதவி பணியாளர் பணி பெற்றுத் தருவதாக கூறி 17 லட்சம் ரூபாய் பெற்றுக்கொண்ட செல்வகுமார், 4 லட்சம் ரூபாயை மட்டும் திருப்பி கொடுத்துவிட்டு மீத தொகையை தராமல் ஏமாற்றிவிட்டதாக நெய்வேலியை சேர்ந்த தமிழ்ச்செல்வன் என்பவர் சேலம் எஸ்.பி. ஸ்ரீஅபிநவ் இடம் புகார் அளித்தார். இதுபற்றி விசாரிக்க சேலம் மாவட்ட குற்றப்பிரிவு போலீசாருக்கு எஸ்.பி. உத்தரவிட்டார். அதன்படி விசாரணை நடத்திய குற்றப்பிரிவு போலீசார், எடப்பாடி பழனிச்சாமியின் தனி உதவியாளர் மணி மற்றும் செல்வகுமார் ஆகியோர் மீது மோசடி, கூட்டுச்சதி ஆகிய பிரிவுகளில் வழக்குப்பதிவு செய்துள்ளனர். ஏற்கனவே தனது நண்பரான மணி மீது செல்வகுமாரும் தனியே ஒரு புகார் அளித்திருந்தார்.

அதில் வனத்துறை, கால்நடை பராமரிப்புத்துறை, உணவுத்துறை, மின்வாரியம் உள்ளிட்ட துறைகளில் 32 பேருக்கு வேலை வாங்கி தருவதாக 1 கோடியே 37 லட்சம் ரூபாயை மணி பெற்றதாக கூறியிருந்தார். அதில் 60 லட்சம் ரூபாயை மட்டும் திருப்பி கொடுத்த அவர், மீத தொகையை தராமல் ஏமாற்றியதோடு மிரட்டல் விடுத்ததாகவும் குறிப்பிட்டிருந்தார். இதுபற்றியும் விசாரித்து வரும் போலீசார், மணியையும், அவருக்கு பணம் வசூலித்து கொடுத்த செல்வகுமாரையும் பிடித்து விசாரணை மேற்கொண்டுள்ளனர்.

Related Stories: