சென்னையில் வசதி படைத்தவர்களின் வீடுகளை தேர்வு செய்து கொள்ளை; திருவாரூர் முருகனின் கூட்டாளிகள் 5 பேர் கைது

சென்னை: சென்னையில் வசதி படைத்தவர்களின் வீடுகளை தேர்வு செய்து கொள்ளையடிக்கும் கும்பலை சேர்ந்த 5 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். கைதான 5 பேரும் சென்னை அண்ணாநகர் மேற்கில் வசிக்கும் டிராவல்ஸ் நிறுவன அதிபர் இளங்கோவன் வீட்டில் கொள்ளையடித்தவர்கள் என போலீசார் தெரிவித்துள்ளனர். டிராவல்ஸ் அதிபர் இளங்கோவன் மற்றும் அவரது உறவினர்கள் கடந்த 2ம் தேதி அன்று வீட்டின் முதல் தளத்தில் தூங்கிக்கொண்டிருந்தனர்.

அவர்களை வீட்டின் உள்ளே வைத்து பூட்டி விட்டு கீழ் தளத்திலிருந்த பீரோவை உடைத்து 100 சவரன் தங்க நகைகள் 20 கிலோ வெள்ளி பொருட்கள் மற்றும் வைர நகைகளை கொள்ளையடித்து சென்றுள்ளனர். அது குறித்து போலீசார் நடத்திய விசாரணையில் கடையம் தினகரன் தலைமையில் கொள்ளை நடந்திருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. இதையடுத்து தினகரன், ஊத்தங்கரை சிவா, ஜோலார்பேட்டை லோகேஷ், எர்ணாவூர் மோகன் ஆகிய நால்வருடன் ராணி என்ற பெண்ணையும் போலீசார் கைது செய்துள்ளனர். இவர்கள் அனைவரும் மறைந்த கொள்ளையன் திருவாரூர் முருகனின் கூட்டாளிகள் என தெரிவித்துள்ளனர்.

திருச்சியில் லலிதா ஜூவல்லர்ஸ் நகைக் கடையில் சுவற்றில் துளையிட்டு பல கோடி ரூபாய் மதிப்புள்ள நகைகளை கொள்ளையடித்த வழக்கில் கைதான திருவாரூர் முருகனுடன் சேர்ந்து தமிழ்நாடு மட்டுமின்றி தெலுங்கானா, ஆந்திரா, கர்நாடகா என பல மாநிலங்களில் நிகழ்த்திய கொள்ளையிலும் இவர்களுக்கு தொடர்பு இருப்பது தெரிய வந்துள்ளது.

முருகன் மறைவுக்கு பின்னர் அந்த கும்பலுக்கு தலைவனான தினகரன் வசதி படைத்தவர்களின் வீடுகளை நோட்டமிட்டு கொள்ளையடிக்கும் திட்டத்துடன் சென்னையில் ஊடுருவியுள்ளார். அதன் படியே சென்னை அண்ணாநகரில் டிராவல்ஸ் நிறுவன அதிபர் இளங்கோவன் வீட்டை தேர்வு செய்து 10 நாட்களாக நோட்டமிட்டு கொள்ளையை அரங்கேற்றி இருப்பது விசாரணையில் தெரியவந்துள்ளது.

Related Stories: