புதுடெல்லி: முல்லைப் பெரியாறு அணை விவகாரத்தில் ஒன்றிய அரசு ஆதாரங்களை மறைத்து தவறான அறிக்கையை தாக்கல் செய்துள்ளதாக உச்ச நீதிமன்றத்தில் புதிய மனு தாக்கல் செய்யப்பட்டுள்ளது. முல்லைப் பெரியாறு அணையால் மக்களுக்கு எந்த பாதிப்பும் வராமல் நடவடிக்கை எடுப்பதில், துணைக்குழு வும், தேசிய பேரிடர் மேலாண்மை குழுவும்இணைந்து செயல்பட வேண்டும் என கடந்த 2018ம் ஆண்டு உச்ச நீதிமன்றம் உத்தரவிட்டது.இந்நிலையில், முல்லைப் பெரியாறு அணையின் பாதுகாப்பு துணைக்குழுவை கலைக்க கோரியும், அணை பாதுகாப்பு மற்றும் இயக்கமுறைகள் சரியாக இல்லை என்றும் ஜாய் ஜோசப் என்பவர் தொடர்ந்த வழக்கை விசாரித்த உச்ச நீதிமன்றம், இதற்கு விரிவான பதில் மனு தாக்கல் செய்யும்படி ஒன்றிய அரசுக்கு கடந்த 9ம் தேதி உத்தரவிட்டது. இதையடுத்து, ‘முல்லைப் பெரியாறு அணை பாதுகாப்பாக இருக்கிறது. பராமரிப்பு பணிகளும் முடிந்து விட்டது. என வே, அணையை ஆய்வு செய்ய வேண்டும் என்ற பேச்சுக்கே இடமில்லை,’ என ஒன்றிய அரசு கடந்த 18ம் தேதி அறிக்கை தாக்கல் செய்தது.