புதுடெல்லி: ஆந்திர மாநிலத்தில் நீதிபதிகள் மற்றும் நீதித்துறை குறித்து சமூக வலைதளங்களில் அவதூறு கருத்து வெளியிட்ட விவகாரத்தில் 6 பேரை சிபிஐ போலீசார் கைது செய்துள்ளனர். ஆந்திர மாநிலத்தில் உயர் நீதிமன்ற நீதிபதிகளின் சில நீதிமன்ற தீர்ப்புகளுக்கு பின்னர், குற்றம்சாட்டப்பட்ட சிலர் வேண்டும் என்றே நீதிபதிகளுக்கு எதிராக சமூக வலைதளங்களில் அவதூறு கருத்துக்களை வெளியிட்டனர்.
இது தொடர்பாக சம்பந்தப்பட்டவர்களை கைது செய்ய வேண்டும் என்று ஆந்திர உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு இருந்தது. இது தொடர்பாக கடந்த 2020ம் ஆண்டு நவம்பர் 11ம் தேதி சிபிஐ சார்பில் 16 பேர் மீது வழக்கு பதியப்பட்டது. இது தொடர்பாக சிபிஐ அதிகாரிகள் விசாரணை நடத்தி வந்தனர். வழக்கு தொடர்பாக ஏற்கனவே 5 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். இவர்களுக்கு எதிராக தனித்தனியாக குற்றப்பத்திரிக்கை தாக்கல் செய்யப்பட்டுள்ளது. இந்நிலையில், கடந்த 22ம் தேதி சிபிஐ வெளியிட்டுள்ள அறிக்கையில், சமூக வலைதளத்தில் ஆந்திர நீதிபதிகளுக்கு எதிராக அவதூறு கருத்து பதிவிட்டது தொடர்பாக மேலும் 6 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர்,’ என குறிப்பிடப்பட்டுள்ளது.