வீர வணக்கநாள் அனுசரிப்பு

கிருஷ்ணகிரி : கிருஷ்ணகிரியில் காவல் துறை சார்பில் வீர வணக்கநாள் அனுசரிக்கப்பட்டது. நாடு முழுவதும் பாதுகாப்பு பணியில் வீரதீர செயல்களில் ஈடுபட்டு உயிர்த்தியாகம் செய்த போலீசார் நினைவைப் போற்றும் வகையில் நேற்று வீரவணக்க நாள் அனுசரிக்கப்பட்டது. கிருஷ்ணகிரி மாவட்ட எஸ்.பி., அலுவலகம் முன் உள்ள மைதானத்தில் நடைபெற்ற நிகழ்ச்சியில் கலெக்டர் ஜெயச்சந்திரபானு ரெட்டி, எஸ்.பி, சாய்சரண் தேஜஸ்வி, ஏ.எஸ்.பி., அரவிந்த் மற்றும் டி.எஸ்.பி.,க்கள் மாவட்ட வன அலுவலர், போலீசார் உள்ளிட்டோர் கலந்து கொண்டு, அங்கிருந்த நினைவு தூணில் உயிர்நீத்த காவல்துறையினருக்கு மலர்வளையம் வைத்து அஞ்சலி செலுத்தினார். மேலும், 63 குண்டுகள் முழங்க மரியாதை செலுத்தப்பட்டது.

அப்போது எஸ்.பி., சாய்சரண் தேஜஸ்வி பேசியதாவது:

நாட்டின் தொலைதூர பகுதிகளில் பல்வேறு பணிகளிலும்,  நாட்டின் எல்லைகளை பாதுகாப்பதில் தொடர்ந்து போராடி வரும் போலீசாருக்காக நாம் இங்கு கூடியுள்ளோம். கடந்த செப்டம்பர் மாதம் 2020 முதல் ஆகஸ்ட் 2021 வரை, 377 பேர் கடமையின் போது தங்கள் உயிரை தியாகம் செய்துள்ளனர். அவர்களின் தியாகங்களால் சமூகம் அமைதியாகவும் செழிப்புடனும் இருந்து வருகிறது. இன்று நம்முடன் இல்லாத அவர்களை நாம் உறுதியாக நினைவில் கொள்ள வேண்டும், நம் கடமைகளில் உறுதியாக பணியாற்ற வேண்டும்.

இவ்வாறு எஸ்.பி. சாய்சரண் தேஜஸ்வி பேசினார்.

Related Stories: