ஊட்டி: ஊட்டி அரசு தாவரவியல் பூங்கா கண்ணாடி மாளிகையில் வைக்கப்பட்டுள்ள பல வகையான சக்குளன்ஸ் தாவரங்கள் சுற்றுலா பயணிகளை கவர்ந்து வருகிறது. ஊட்டி அரசு தாவரவியல் பூங்காவில் பல்வேறு வகையான மலர் செடிகள், தாவரங்கள், மரங்கள், பெரணிகள், கள்ளிச் செடிகள் மற்றும் பல்வேறு அழகு தாவரங்கள் வைக்கப்பட்டுள்ளது. இதனை காண நாள்தோறும் ஏராளமான சுற்றுலா பயணிகள் மற்றும் ஆராய்ச்சி மாணவர்கள் வருகின்றனர். தற்போது, 2ம் சீசன் என்பதால் பூங்காவில் பல்வேறு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன. இது தவிர கண்ணாடி மாளிகையிலும் 5 ஆயிரம் தொட்டிகளை கொண்டு மலர் அலங்காரங்கள் செய்யப்பட்டுள்ளன.