புதுடெல்லி: நாட்டின் மொத்த மின் வினியோகத்தில் 70 சதவீதத்தை உற்பத்தி செய்யும் 135 நிலக்கரி மின் உற்பத்தி ஆலைகளில், பாதிக்கும் மேலான ஆலைகளில் நிலக்கரி தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக புகார் எழுந்துள்ளது. உலக சந்தையில் நிலக்கரியின் விலை உயர்வு, போதிய வினியோகம் இல்லாதது, கொரோனா தொற்றினால் நிலக்கரி உற்பத்தி பாதிப்பு உள்ளிட்ட காரணங்களால் மின் உற்பத்தி ஆலைகளில் இந்த தட்டுப்பாடு ஏற்பட்டுள்ளதாக கூறப்படுகிறது. இதனால் வடமாநிலங்களான குஜராத், பஞ்சாப், டெல்லி உள்ளிட்ட மாநிலங்களில் பல மணி நேரம் மின்சாரம் துண்டிக்கப்பட்டது. இந்நிலையில், ஒன்றிய உள்துறை அமைச்சர் அமித் ஷா மின்சாரத் துறை, நிலக்கரித் துறை அமைச்சர்கள் ஆர்கே. சிங், பிரகலாத் ஜோஷி ஆகியோருடன் நேற்று ஆலோசனை நடத்தினார். அப்போது நிலக்கரி கையிருப்பு, மின் தட்டுபாடு ஆகியவை குறித்து ஆலோசிக்கப்பட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.