அவதூறு வழக்கில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட்..!!

திண்டுக்கல்: அவதூறு வழக்கில் பாஜக முன்னாள் தேசிய செயலாளர் எச்.ராஜாவுக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றம் பிடிவாரண்ட் பிறப்பித்துள்ளது. கடந்த செப்டம்பர் 14ம் தேதி திண்டுக்கல் மாவட்டம் வேடசந்தூரில் இந்து முன்னணி கூட்டம் நடைபெற்றது. கூட்டத்தில் பங்கேற்று பாரதிய ஜனதா கட்சியை சேர்ந்த எச்.ராஜா பேசுகையில், இந்து அறநிலையத்துறை அதிகாரிகள் முறைகேடாக  செயல்படுவதாகவும், கோயிலுக்கு சொந்தமான நிலங்களை முறைகேடாக விற்பனை செய்வதாகவும் கூறியிருந்தார்.

மேலும் அறநிலையத்துறை அதிகாரிகள் மற்றும் அவர்களது குடும்ப பெண்களை பற்றி எச்.ராஜா அவதூறாக பேசியிருந்தார். இது தொடர்பாக இந்து அறநிலையத்துறை உதவி ஆணையர் ஹரிஹரன் கடந்த செப்டம்பர் 20ம் தேதி விருதுநகர் பஜார் காவல் நிலையத்தில் சார்பு ஆய்வாளர் பாஸ்கரனிடம் புகார் அளித்தார். இந்த புகாரின் அடிப்படையில் எச்.ராஜா மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டு வழக்கு விசாரணையானது ஸ்ரீவில்லிபுத்தூர் ஒருங்கிணைந்த நீதிமன்ற வளாகத்தில் உள்ள மாவட்ட நீதித்துறை நடுவர் நீதிமன்றத்தில் நடைபெற்று வந்தது.

இந்த வழக்கு தொடர்பாக பலமுறை நீதிமன்றத்தில் ஆஜராக எச்.ராஜாக்கு சம்மன் அனுப்பப்பட்டது. ஆனால் அவர் நேரில் ஆஜராகவில்லை. இந்நிலையில், இந்த வழக்கு ஸ்ரீவில்லிபுத்தூர் நீதிமன்றத்தில் இன்று விசாரணைக்கு வந்த போது எச்.ராஜாவுக்கு பிடிவாரண்ட் பிறப்பித்து நீதிபதி பரம்வீர் உத்தரவிட்டார்.

Related Stories: