வேலூர்: வேலூர் மாநகராட்சி 2வது மண்டலம் அலமேலுமங்காபுரம் ஏபிஎல் அவென்யூ குடியிருப்பில் 500 குடும்பங்கள் வரை வசித்து வருகின்றனர். இக்குடியிருப்பில் பூங்காவுக்காக ஒதுக்கப்பட்ட இடம் அவ்வழியாக செல்லும் வரத்துக்கால்வாயை ஒட்டி அமைந்துள்ளது. இந்த இடத்தில் பூங்கா அமைக்கப்படாமல் இருந்த நிலையில் இங்கு நீரேற்று நிலையம் அமைக்க மாநகராட்சி முடிவு செய்து குடிநீர் வடிகால் வாரியத்திடம் ஒப்படைத்ததாக தெரிகிறது.ஆனால் நீரேற்று நிலையத்துக்கான பணிகள் தொடங்கப்படாததால் இவ்விடத்தில் சமூக விரோதிகளால் சட்டவிரோதமாக 10 அடி ஆழத்துக்கும் மேல் மண் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது. இதனால் அங்கு 10 அடி ஆழத்துக்கும் மேல் தண்ணீர் தேங்கியுள்ளது. தண்ணீர் தேங்கி அப்பகுதியில் ஊறியுள்ளதால் அதை சுற்றியுள்ள வீடுகளின் காம்பவுண்ட் சுவர்களில் விரிசல் ஏற்பட்டுள்ளதாகவும், இதுதொடர்பாக மாநகராட்சியிடம் இரண்டு முறை நேரில் மனு அளித்துள்ளதாகவும், ஆனால் எந்தவித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்றும் அப்பகுதி மக்கள் வேதனை தெரிவிக்கின்றனர்.