அரியலூர்: திருமானூர் அருகே 100 ஆண்டுகளுக்கு மேல் பழமைவாய்ந்த ஆலமரம் வேருடன் பிடுங்கி வேறு இடத்தில் நடப்பட்டது. இப்பணியை செய்த சமூக ஆர்வலர்களுக்கு பொதுமக்கள் பாராட்டு தெரிவித்தனர்.அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றியம் பெரம்பலூர் - மானாமதுரை தேசிய நெடுஞ்சாலையில் விபத்துகள் அதிகம் நடக்கும் குறுகிய இடங்களை கண்டறியப்பட்டு தற்போது அப்பகுதிகளில் விரிவாக்கம் செய்யும் பணி கடந்த சில மாதங்களாக நடைபெற்று வருகிறது. இதற்காக சாலைகளில் உள்ள புளியமரங்கள் வெட்டி அகற்றப்பட்டு வருகின்றன. இந்நிலையில், அரியலூர் மாவட்டம் திருமானூர் ஒன்றிய அலுவலகம் அருகே நந்தியாறு வாய்க்காலின் வடகரையில் சுமார் நூறு ஆண்டுகளுக்கும் மேல் பழமை வாய்ந்த ஆலமரம் சாலை விரிவாக்கத்தின்போது அகற்றப்படும் நிலை ஏற்பட்டது.