குஜராத் மாநில சட்டமன்றத்தின் முதல் பெண் சபாநாயகர் பதவியேற்பு: முதல்வர் வாழ்த்து

காந்திநகர்: குஜராத் மாநில சட்டமன்றத்தின் முதல் பெண் சபாநாயகராக நிமாபென் ஆச்சாரியா பதவியேற்றுக்கொண்டார்.  குஜராத்தில் பாஜ ஆட்சி நடக்கிறது. இம்மாநில சட்டமன்ற சபாநாயகராக இருந்த ராஜேந்திர திரிவேதி, கடந்த 16ம் தேதி ராஜினாமா செய்தார். இவருக்கு புதிய முதல்வர் பூபேந்திர படேல் அமைச்சரவையில்  அமைச்சர் பதவி வழங்கப்பட்டுள்ளது. இவரது ராஜினாமாவால் காலியான சபாநாயகர் பதவிக்கு பாஜ மூத்த பெண் எம்எல்ஏ நிமாபென் ஆச்சாரியாவின் பெயரை முதல்வர் பரிந்துரைத்தார். இவரது நியமனத்துக்கு எதிர்க்கட்சியான காங்கிரசும் ஆதரவு தெரிவித்தது.

இந்நிலையில், 2 நாட்கள் நடைபெறும் குஜராத் சட்டப்பேரவையின் மழைக்கால கூட்டத் தொடர் நேற்று தொடங்கியது. இதையடுத்து, நேற்று அவர் சட்டப்பேரவையின் சபாநாயகராக பொறுப்பேற்றுக்கொண்டார். ‘இயன்றவரை புதிய பொறுப்பை சிறப்புற செய்வேன்’ என்று அவர் கூறினார். இது குறித்து முதல்வர் பூபேந்திர படேல் கூறுகையில், `1960ம் ஆண்டில் குஜராத் மாநிலம் உருவாக்கப்பட்ட பின்பு, முதல் பெண் சபாநாயகராக தேர்ந்தெடுக்கப்பட்ட நிமாபென்னுக்கு சட்டப்பேரவை உறுப்பினர்கள் சார்பில் வாழ்த்துக்கள்,’ என்று கூறினார். இதன்மூலம், குஜராத் சட்டப்பேரவையின் முதல் பெண் சபாநாயகர் என்ற பெருமையை இவர் பெற்றுள்ளார்.

Related Stories: