தெலங்கானா மருந்து கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பேரை மீட்ட சிறுவன்: போலீசார், தீயணைப்புத்துறையினர் பாராட்டு


திருமலை: தெலங்கானாவில் உள்ள மருந்து கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 தொழிலாளர்களை மீட்ட சிறுவனுக்கு போலீசார் மற்றும் தீயணைப்புத்துறையினர் பாராட்டுகளை தெரிவித்து வருகின்றனர். தெலங்கானா ரங்காரெட்டி மாவட்டம் ஷாத்நகரில் தனியார் மருந்து கம்பெனி இயங்கி வருகிறது. இங்கு 300க்கும் மேற்பட்டோர் வேலை செய்து வருகின்றனர். நேற்றுமுன்தினம் மாலை திடீரென தீப்பற்றியது. கம்பெனி முழுவதும் புகை மண்டலம் போல் காட்சியளித்தது. இதனால் அங்கிருந்த ஊழியர்கள் அலறியடித்தபடி வெளியேறினர். இருப்பினும் சுமார் 60 ஊழியர்கள் வெளியே வர முடியாமல் சிக்கிக்கொண்டனர். கட்டிடத்தின் மேல் பகுதிக்கு தொழிலாளர்கள் ஓடிவந்து அங்கிருந்தபடி தங்களை காப்பாற்றும்படி கூச்சலிட்டனர். அவர்களில் 10 பேர் மாடியில் இருந்து குதித்து காயமடைந்தனர்.

இவர்களில் 4 பேர் படுகாயமடைந்தனர். இதுகுறித்து தகவலறிந்த தீயணைப்பு வீரர்கள் 2 தீயணைப்பு வாகனங்களில் விரைந்து சென்றனர். ஆனால் அதற்குள் அதேபகுதியை சேர்ந்த 15 வயது சிறுவனான சாய்சரண் என்பவர் உடனடியாக மாடியில் ஏறிச்சென்று ஜன்னல் கம்பியில் கயிறு கட்டி உள்ளே தீயில் சிக்கிய 50 பேரை பல்வேறு சிரமத்திற்கு இடையில் பாதுகாப்பாக வெளியேற உதவினான். அதற்குள் தீயணைப்பு வீரர்களும் விரைந்து வந்து ஏணி மூலம் தொழிலாளர்களை மீட்டனர். சிறுவனின் செயலை இணையதளங்களில் ஏராளமானோர் பாராட்டி வருகின்றனர்.

The post தெலங்கானா மருந்து கம்பெனியில் ஏற்பட்ட பயங்கர தீ விபத்தில் 50 பேரை மீட்ட சிறுவன்: போலீசார், தீயணைப்புத்துறையினர் பாராட்டு appeared first on Dinakaran.

Related Stories: