குஜராத், ராஜஸ்தானில் ரூ300 கோடி போதைப்பொருள் பறிமுதல்: உற்பத்தி ஆலைகள் சிக்கின


அகமதாபாத்: குஜராத், ராஜஸ்தானில் ரகசியமாக செயல்பட்டு வந்த போதைப்பொருள் ஆலைகளை கண்டுபிடித்த அதிகாரிகள், அங்கிருந்து ரூ.300 கோடி மதிப்பிலான போதைப்பொருளை பறிமுதல் செய்துள்ளனர். குஜராத் மற்றும் ராஜஸ்தானில் சில இடங்களில் சட்டவிரோதமாக போதைப் பொருள் தயாரிக்கும் ஆய்வகங்கள் செயல்படுவதாக போதைப் பொருள் தடுப்பு பிரிவு போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்படி குஜராத் தீவிரவாத தடுப்பு பிரிவு போலீசாருடன் இணைந்து கடந்த 3 மாதமாக தீவிர விசாரணை மேற்கொண்டனர். இதில் ராஜஸ்தானில் ஜோத்பூர் மற்றும் ஜலோர் ஆகிய மாவட்டங்களில் 3 இடத்திலும், குஜராத்தில் காந்திநகரிலும் மெபிடிரோன் எனும் போதைப்பொருளை தயாரித்து வந்த ஆலைகளை அதிகாரிகள் கண்டறிந்தனர்.

நேற்று அதிகாலை ஆலைகளில் அதிரடியாக நுழைந்த அதிகாரிகள், அங்கிருந்து ரூ.300 கோடி மதிப்பிலான போதைப் பொருட்களை பறிமுதல் செய்தனர். இதுதொடர்பாக 13 பேர் கைது செய்யப்பட்டுள்ளனர். மேலும் 4 இடங்களில் சோதனை நடத்தப்பட்டு வருவதாகவும், இன்னும் அதிகமான போதைப்பொருட்கள் பறிமுதல் செய்யப்பட வாய்ப்பிருப்பதாகவும் அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.

The post குஜராத், ராஜஸ்தானில் ரூ300 கோடி போதைப்பொருள் பறிமுதல்: உற்பத்தி ஆலைகள் சிக்கின appeared first on Dinakaran.

Related Stories: