‘குவாட்’ அமைப்பு நாடுகளுடன் ஆலோசனை முடிவு: ஐ.நா சபையில் பிரதமர் மோடி மாலை உரை..!

நியூயார்க்: அமெரிக்காவில் நடந்த உச்சி மாநாட்டில், உலக நன்மைக்கான சக்தியாக குவாட் அமைப்பு செயல்படும் என்று, பிரதமர் மோடி நம்பிக்கை தெரிவித்துள்ளார். உலக நாடுகள் பயன்பெறும் விதமாக,  ஈடுபட்டுள்ளதாக அமெரிக்க அதிபர் ஜோ பைடன் கூறியுள்ளார். பிரதமர் மோடி மூன்று நாள் பயணமாக அமெரிக்கா சென்றுள்ளார். இந்த நிலையில், அமெரிக்காவின் வெள்ளை மாளிகையில் நேற்றிரவு 11.30 மணியளவில் ‘குவாட்’ நாடுகளின் உச்சி மாநாடு நடைபெற்றது. அமெரிக்க அதிபர் ஜோ பைடன், ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன், ஜப்பான் பிரதமர் யோஷி கிடே சுகா, இந்திய பிரதமர் மோடி ஆகிய 4 நாடுகளின் தலைவர்கள் கலந்து கொண்டனர். பருவநிலை மாற்றத்தை கட்டுப்படுத்துவதற்கான வழிகள், கொரோனாவை எதிர்கொள்வது உட்பட பல்வேறு பிரச்னைகள் குறித்து கூட்டத்தில் விவாதிக்கப்பட்டது. இக்கூட்டத்தில் பேசிய மோடி, ‘குவாட் நாடுகள் கொரோனா தொற்றுக்கு எதிராக போராட முன்வந்துள்ளன.

தடுப்பூசி தயாரிப்பின் மூலம் குவாட் நாடுகள் பயன்பெறும். உலக நன்மைக்கான சக்தியாக இந்த மாநாடு மாறும். இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி நிலவ நடவடிக்கை எடுக்கப்படும். சர்வதேச பாதுகாப்பு, பருவநிலை மாற்றத்துக்கான எதிரான வழிமுறைகள் குறித்து ஆலோசித்தது எனக்கு மகிழ்ச்சி அளிக்கிறது’ என்றார். தொடர்ந்து அமெரிக்க அதிபர் ஜோ பைடன் பேசுகையில், ‘இந்தியாவில் 100 கோடி கொரோனா தடுப்பு மருந்துகளை தயாரிக்கும் முயற்சியில் குவாட் அமைப்பு நாடுகள் ஈடுபட்டுள்ளன.  குவாட் ஃபெல்லோஷிப் என்ற திட்டத்தை அறிமுகப்படுத்த உள்ளோம். இத்திட்டத்தின் மூலம் குவாட் அமைப்புகளில் இடம்பெற்றுள்ள 4 நாடுகளை சேர்ந்த தலா 25 மாணவர்கள், அமெரிக்காவின் முன்னணி பல்கலைக்கழகங்களில் உயர் கல்வி படிக்க வழிவகை செய்யப்படும். ஆண்டுக்கு 4 நாடுகளில் இருந்து 100 மாணவர்கள் தேர்வு செய்யப்படுவார்கள். நேர்மறை கொள்கைகளை நாம் பகிர்ந்து கொள்ள வேண்டும்’ என்றார்.

அதன்பின், ஜப்பான் பிரதமர் யோஷி கிடே பேசுகையில், ‘ஜப்பான் இறக்குமதிக்கு விதிக்கப்பட்டிருந்த தடையை அமெரிக்கா நீக்கியதற்கு நன்றி. இந்தோ-பசிபிக் பகுதியில் சுதந்திரமாகவும், பாதுகாப்பாகவும் சென்று வர நடவடிக்கை எடுப்போம்’ என்றார். தொடர்ந்து ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் பேசுகையில், ‘கொரோனா தடுப்பூசி தொழில்நுட்பங்களை பகிர்ந்து கொள்வோம்’ என்றார். இந்த கூட்டத்தில் மேற்கண்ட நான்கு நாடுகளுமே சீனாவை நேரடியாக குறிப்பிடாமல், இந்தோ - பசிபிக் பிராந்தியத்தில் அமைதி நிலவ ஒன்றிணைவதாக கூறின. இந்நிலையில் இந்திய நேரப்படி இன்று மாலை 6.30 மணியளவில், அமெரிக்காவின் நியூயார்க் நகரில் நடைபெறும் ஐநா பொது சபை கூட்டத்தில் பிரதமர் நரேந்திர மோடி உரையாற்றுகிறார். அதன்பின், தனது அமெரிக்கப் பயணத்தை முடித்துக் கொண்டு பிரதமர் மோடி இந்தியா புறப்படுகிறார். நாளை அவர், டெல்லி வந்தடைவார் என்று தகவல்கள் கூறுகின்றன.

Related Stories: