ஆவடி பஸ் நிலையத்தில் மூதாட்டியிடம் 5 சவரன் அபேஸ்

ஆவடி: திருவள்ளூர் அருகே வேப்பம்பட்டு, அரவிந்த் நகரை சேர்ந்தவர் வசந்தா(60). இவரது கணவர் முனுசாமி காலமாகிவிட்டார்.  நேற்று முன்தினம் வசந்தா, கோயம்பேட்டில் உள்ள தனது மகன் வீட்டிற்கு சென்றுள்ளார். பின்னர், அவர் நேற்று மதியம் அங்கிருந்து மீண்டும் மாநகர பஸ் மூலமாக ஆவடியில் இறங்கி பின்னர், அங்கிருந்து வீட்டுக்கு செல்ல பஸ் நிலையத்தில் காத்து கொண்டிருந்தார். அப்போது, சுமார் 30 வயது மதிக்கதக்க வாலிபர் ஒருவர் அங்கு வந்து அவர் நகைகளை போட்டு கொண்டு பஸ் நிலையத்தில் காத்து கொண்டிருக்க வேண்டாம். இங்கு திருடர்கள் அதிகமாக  உள்ளனர். எனவே, நகைகளை கழட்டி உங்களது பையில் வைத்து கொள்ளுங்கள் என கூறியுள்ளார்.

 அதன் பிறகு, வசந்தா அணிந்திருந்த நகைகளை, மர்ம நபரே வாங்கி பையில் வைத்துள்ளார். பின்னர், சிறிது நேரம் கழித்து வசந்தா பையை சோதனை செய்தார். அப்போது, அவரது பையிலிருந்து 5 சவரன்  நகைகள் காணவில்லை. மேலும், மர்ம நபர் தான் நகைகளை அபேஸ்  செய்திருப்பது தெரியவந்தது. இது குறித்து வசந்தா ஆவடி காவல் நிலையத்தில் புகார் செய்தார். இன்ஸ்பெக்டர் ஜெய்கிருஷ்ணன் தலைமையில் போலீசார் வழக்குப்பதிவு செய்து உள்ளனர். மேலும், போலீசார் அப்பகுதியில் உள்ள கண்காணிப்பு கேமராக்கள் மூலம் நகைகளை அபேஸ் செய்த மர்ம நபரை தேடி வருகின்றனர்.

Related Stories: