சம்பள பணத்தை பிரிப்பதில் தகராறு தொழிலாளி அடித்து கொலை: போதை நண்பர்கள் கைது

சென்னை: தேனாம்பேட்டை நடைபாதையில் வசித்து வந்தவர் வெற்றிவேல் (41). கட்டிட தொழிலாளி. வேலை செய்யும் இடத்தில் திருவண்ணாமலை மாவட்டம் ஆரணியை சேர்ந்த கட்டிட தொழிலாளர்கள் சங்கர் (45), ரகு (40) ஆகியோர் இவருக்கு பழக்கமாகியுள்ளனர். இவர்கள், கடந்த 21ம் தேதி இரவு தேனாம்பேட்டை தியாகராயர் சாலையில் மது அருந்தி உள்ளனர். பின்னர், கட்டிட வேலை செய்த சம்பளத்தை 3 பேரும் பிரித்த போது, வெற்றிவேல் மற்றும் சங்கர், ரகு ஆகியோருக்கு இடையே தகராறு ஏற்பட்டது. இதில், வெற்றிவேல் இருவரையும் தாக்கியதாக கூறப்படுகிறது.

ஆத்திரமடைந்த சங்கர் மற்றும் ரகு ஆகியோர் அருகில் கிடந்த கல்லை எடுத்து வெற்றிவேல் தலையில் அடித்துள்ளனர். அவரது அலறல் சத்தம் கேட்டு அருகில் இருந்தவர்கள் ஓடிவந்தனர். இதை பார்த்த சங்கர் மற்றும் ரகு ஆகியோர் அங்கிருந்து தப்பி ஓடிவிட்டனர். தகவலறிந்து வந்த தேனாம்பேட்டை போலீசார், வெற்றிவேலை மீட்டு ராயப்பேட்டை அரசு மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கி சிகிச்சை பலனின்றி நேற்று காலை உயிரிழந்தார். இதுகுறித்து போலீசார் வழக்கு பதிந்து, தலைமறைவான சங்கர் மற்றும் ரகுவை நேற்று கைது செய்தனர்.

Related Stories: