பிரியங்கா காந்தி புதியதாக கட்டியுள்ள சிம்லா பங்களாவுக்கு சோனியா, ராகுல் வருகை

சிம்லா: பிரியங்கா காந்தி புதியதாக கட்டியுள்ள சிம்லா பங்களாவுக்கு சோனியா காந்தியும், ராகுல்காந்தியும் வந்துள்ளனர். அகில இந்திய காங்கிரஸ் இடைக்கால தலைவர் சோனியா காந்தி மற்றும் முன்னாள் காங்கிரஸ் தலைவர் ராகுல் காந்தி ஆகியோர் டெல்லியில் இருந்து நேற்று விமானம் மூலம் சண்டிகருக்கு வந்தனர். அவர்கள் சண்டிகரில் இருந்து சாலை வழியாக சிம்லாவுக்கு வந்தனர். பின்னர் அங்கிருந்து சரப்ராவில் உள்ள குடியரசுத் தலைவர் மாளிகை பகுதியில் தியோதார் காடுகளுக்கு மத்தியில் புதியதாக கட்டப்பட்டுள்ள பிரியங்கா காந்தியின் பங்களாவுக்கு சென்றனர்.

இங்கு, சோனியா காந்தியும், ராகுலும் மூன்று நாட்கள் தங்கவுள்ளனர். ஏற்கனவே, காங்கிரஸ் பொதுச் செயலாளரும், சோனியாவின் மகளுமான பிரியங்கா காந்தி, கடந்த ஒரு வாரத்திற்கு முன்னதாக தனது கணவர், குழந்தைகளுடன் இந்த பங்களாவில் தங்கியுள்ளார். இதுகுறித்து சிம்லா காங்கிரஸ் மூத்த நிர்வாகிகள் கூறுகையில், ‘பஞ்சாப் புதிய முதல்வர் சரண்ஜித் சன்னி பதவியேற்பு விழாவை முடித்துக் கொண்டு, சோனியா, ராகுல் ஆகியோர் சிம்லா வந்தனர். பிரியங்கா குடும்பத்தினர் ஏற்கனவே இங்கே தான் தங்கியுள்ளனர். எவ்வளவு நாட்கள் தங்கவுள்ளனர் என்பது தெளிவாக தெரியவில்லை’ என்றனர்.

Related Stories: