போதையில் வந்தபோது சாப்பாடு போடாததால் தாயை வெட்டி கொன்ற மகன்: வேளச்சேரியில் பரபரப்பு

வேளச்சேரி: வேளச்சேரி, நேரு நகர், திரு.வி.க தெருவை சேர்ந்தவர் ராமலிங்கம். இவரது மனைவி லட்சுமி (47). தம்பதிக்கு செல்வி என்ற மகளும், மூர்த்தி (30) என்ற மகனும் உள்ளனர். பிளம்பர் வேலை செய்யும் மூர்த்தி மது அருந்திவிட்டு அடிக்கடி மனைவியுடன் தகராறில் ஈடுபட்டதால், கடந்த 3 வருடத்திற்கு முன்  அவர், மூர்த்தியை பிரிந்து சென்றார். இதனால், பெற்றோருடன் வசித்து வந்த மூர்த்தி, மது அருந்த பணம் கேட்டு அடிக்கடி தாயிடம் தகராறில் ஈடுபட்டு வந்துள்ளார். இந்நிலையில், நேற்று முன்தினம் இரவு போதையில் வீட்டிற்கு வந்த மூர்த்திக்கு, தாய் சாப்பாடு கொடுத்துள்ளார். அதை சாப்பிட்டு விட்டு வெளியில் சென்ற மூர்த்தி, மீண்டும் குடித்துவிட்டு வீட்டுக்கு வந்து, தாயிடம் சாப்பாடு கேட்டுள்ளார். அதற்கு அவர், சாப்பாடு  தீர்ந்து விட்டதாக கூறியுள்ளார்.

அதற்கு மூர்த்தி, எனக்கு சாப்பாடு வேண்டும், இப்போதே சமைத்து கொடு, என கூறியுள்ளார். அவர் மறுத்ததால் ஆத்திரமடைந்த மூர்த்தி, தாய் லட்சுமியை அடித்து உதைத்துடன், வீட்டில் இருந்த அரிவாள்மனையை எடுத்து தாயை சரமாரியாக வெட்டிவிட்டு தப்பினார். இதில், லட்சுமி சம்பவ இடத்திலேயே ரத்த வெள்ளத்தில்  பரிதாபமாக  உயிரிழந்தார். தகவலறிந்து வந்த வேளச்சேரி போலீசார், சடலத்தை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ராயப்பேட்டை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுகுறித்து வழக்குப்பதிவு செய்து மூர்த்தியை தேடி வந்தனர். அவர், சைதாப்பேட்டையில் உள்ள நண்பர் வீட்டில் பதுங்கி இருப்பது தெரியவந்தது. அங்கு சென்று, அவரை கைது செய்தனர்.

Related Stories: