வத்திராயிருப்பு: வத்திராயிருப்பில் போக்குவரத்து பணிமனை வேண்டுமென்று நீண்ட நாட்களாக வத்திராயிருப்பு பகுதி மக்கள் கோரிக்கை விடுத்து வந்தனா். கடந்த 6 ஆண்டுக்கு முன்பு அதிமுக ஆட்சியில் போக்குவரத்து பணிமனை வேலை தொடங்கியது. வேலையானது ஆமை வேகத்தில் நடைபெற்றது. பணிமனையில் அடிப்படை வசதிகள் முழுமை அடையாத நிலையிலும் போக்குவரத்து பணிமனைக்கு தேவையான உபகரணங்கள் எதுவும் இல்லாத நிலை இருந்து வந்தது. போக்குவரத்து பணிமனைக்கு முன்பு உள்ள இடம் மேடு பள்ளமாக இருந்தாலும் செல்லக்கூடிய பாதையும் தார்ச்சாலை உள்ளிட்டவை போடப்பட வில்லை. அலுவலகத்திற்கு தேவையான உள்ளிட்ட சாதனங்கள் ரேக் மேஜை நாற்காலி உள்ளிட்ட பொருட்கள் இல்லை.சட்டமன்ற தோ்தல் தேதி அறிவித்து விடுவார்கள் என்ற அவசரத்தில் கடந்த பிப். 3ம் தேதி அப்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி காணொளி காட்சி மூலம் திறந்து வைத்ததாக கல்வெட்டு உள்ளது. ரூ.1 கோடியில் கட்டப்பட்ட போக்குவரத்து பணிமனை முழுமை அடையாமல் அவசரத்தில் திறந்தது அதிமுக ஆட்சியின் இயலாமையை காட்டியதாக மக்கள் எண்ணுகின்றனா். ஏனென்றால், எந்தவொரு கட்டிடத்தையும் முழுமையடையாமல் திறந்து வைத்ததோடு பஸ்களை இயக்குவதற்கு தேவையான நடவடிக்கை எடுக்கவில்லை.