கிருஷ்ணகிரி: தென்பெண்ணை ஆறு நீர்ப்பிடிப்பு பகுதிகளிலும், கிருஷ்ணகிரி அணை சுற்றுவட்டார பகுதிகளிலும், கடந்த சில நாட்களுக்கு முன்பு கனமழை பெய்தது. இதனால் கிருஷ்ணகிரி அணைக்கு நீர்வரத்து அதிகரிக்க தொடங்கியது. கடந்த 2ம் தேதி 47.95 அடியாக இருந்த நீர்மட்டம், 10 நாளில் படிப்படியாக உயர்ந்து, நேற்று காலை 50 அடியை எட்டியது. தற்போது அணையின் மொத்த உயரமான 52 அடியில் 50 அடிக்கு தண்ணீர் நிரம்பியுள்ளது. அணைக்கு நேற்று விநாடிக்கு 417 கனஅடி நீர் வந்து கொண்டிருக்கிறது.