புதுடெல்லி: டெல்லியில் கடந்த 19 ஆண்டுகளில் இல்லாத வகையில் ஒரே நாளில் அதிகபட்சமாக 112.1 மி.மீ. கனமழை பெய்துள்ளது. தலைநகர் டெல்லியின் பல்வேறு பகுதிகளில் நேற்று காலை கனமழை பெய்தது. இதனால், தாழ்வான பகுதிகளில் மழைநீர் வெள்ளமாக தேங்கியது. மின்டோ ரயில் நிலையம் உட்பட பல முக்கிய இடங்களில் மழை நீர் தேங்கியதால் மக்கள் அவதிக்குள்ளாகினர். போக்குவரத்து கடுமையாக பாதிக்கப்பட்டது. நேற்று காலை 8.30 மணி வரை பெய்த மழையானது 112.1 மிமீ. என பதிவாகி உள்ளது. இது, கடந்த 19 ஆண்டில் இல்லாத வகையில் ஒரே நாளில் பெய்த அதிகபட்ச மழை அளவாகும்.