பசுமை பூங்கா அருகே மண்டை ஓடு, 2 மூட்டை எலும்புகள் மீட்பு

*திருச்சியில் பரபரப்பு

திருச்சி : திருச்சி பஞ்சப்பூர் பசுமை பூங்கா அருகே மண்டை ஓடுகள், 2 மூட்டை எலும்புகள் மீட்கப்பட்ட சம்பவம் திருச்சியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது. திருச்சி மாநகராட்சி சார்பில் பொதுமக்களுக்கு பொழுது போக்கும் விதமாக பசுமை பூங்காக்கள், ஏற்கனவே உள்ள பூங்காக்களை சீர்ப்படுத்தி பயன்பாட்டிற்கு விடப்பட்டுள்ளது. இந்த பூங்காக்களில் முதியவர் முதல் குழந்தைகள் வரை வாக்கிங் மற்றும் அங்குள்ள விளையாட்டு சாதனங்களில் விளையாடி மகிழ்ந்து வருகின்றனர்.

 இதில் திருச்சி மதுரை பைபாஸ் ரோடு பஞ்சப்பூர் அருகே மெயின் ரோட்டில் மாநகராட்சி பசுமை பூங்கா உள்ளது. இந்த பூங்காவில் அப்பகுதி மட்டுமின்றி வாகனங்களில் செல்பவர்கள் இளைப்பாறியும், வாக்கிங் சென்று வருகின்றனர். இந்நிலையில், இந்த பூங்கா சுற்றுச்சுவர் அருகே மனித மண்டை ஓடுகள் மற்றும் 2 மூட்டைகள் கட்டப்பட்டு சந்தேகத்திற்கிடமான முறையில் கிடப்பதாக எ.புதூர் போலீசாருக்கு பொதுமக்கள் நேற்று தகவல் அளித்தனர்.

அதன் பேரில் போலீசார் சம்பவம் இடத்திற்கு சென்று சோதனை செய்ததில் 8 மனித மண்டை ஓடுகள் மற்றும் 2 மூட்டைகளில் மனித எலும்புகளும் இருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தனர். சுடுகாட்டில் தோண்டி எடுத்து இங்கு கொண்டு வந்து போடப்பட்டதா, இந்த செயலை செய்தவர்கள் யார் என்பதும் குறித்தும் போலீசார் விசாரித்து வருகின்றனர். இச்சம்பவம் அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Related Stories: