தண்டையார்பேட்டை: தண்டையார்பேட்டையில் மாவா தயாரிக்கும் கம்பெனி செயல்ப்படுவதாக தண்டையார்பேட்டை போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் நேற்று இன்ஸ்பெக்டர் சங்கரநாராயணன் தலைமையிலான போலீசார் தண்டையார்பேட்டை வெங்கடாசலம் தெருவில் உள்ள கம்பெனியில் சோதனை நடத்தினர். அங்கு, மாவா மற்றும் மாவா தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள் இருந்தது தெரியவந்தது. இதையடுத்து அங்கிருந்த பாலசுப்பிரமணியன்(49) என்பவரை போலீசார் கைது செய்ய முயன்றனர். அப்போது அவர், என்னை கைது செய்தால் நடப்பது வேறு, மாவாவையும் பறிமுதல் செய்யக் கூடாது என இன்ஸ்பெக்டருக்கு மிரட்டல் விடுத்துள்ளார். இதையடுத்து அவரை கைது செய்தனர். மேலும், வண்ணாரப்பேட்டை லாயர் சின்னத்தம்பி தெருவை சேர்ந்த ஜெயபிரகாஷ் (35), கொடுங்கையூர் சீதாராம் நகரை சேர்ந்த ஆனந்த் (34), வண்ணாரப்பேட்டை இ-பிளாக் பகுதியை சேர்ந்த பொம்மி (எ) அழகம்மாள் (69), ஏ-பிளாக்கை சேர்ந்த சாந்தி (55) ஆகியோரையும் கைது செய்தனர். இவர்களிடமிருந்து 40 கிலோ மாவா, 6 கிலோ ஹான்ஸ், ஜர்தா, 200 கிலோ மாவா தயாரிக்க பயன்படுத்தப்படும் மூலப்பொருட்கள், 130 கிலோ சீவல் பாக்கு, 9 கிலோ இதர பொருட்கள், கிரைண்டர், மிக்ஸி, எடை மிஷின், ஆட்டோ, 2 பைக், 4 செல்போன் மற்றும் 2,300 ரூபாய் பணம் பறிமுதல் செய்யப்பட்டது.