காக்காவை பற்றி கலக்கலான சில தகவல்கள்!

கா.. கா...’ என கரைவதால்தான் காகம் என்று பெயரிடப்பட்டிருக்கலாம். பறவைகளிலேயே புத்திசாலியென்று காகத்தை சொல்கிறார்கள். காகங்களில் தோராயமாக 40 இனங்கள் இருக்கின்றன. இதில் ‘ஜாக்டா’ எனப்படும் இனம், கூடுதல் அறிவுத்திறன் கொண்டது. நரியையே வென்றுவிடும் சாமர்த்தியம் கொண்டது என்பதால்தான் ‘காக்கா - நரி’ கதையே உருவானது.பொதுவாக காக்கையின் ஆயுட்காலம் பத்தாண்டுகளுக்கும் மேல்தான். 13 முதல் 15 ஆண்டு காலம் உயிர் வாழும். சில காகங்கள் இருபது ஆண்டுகள் கூட வாழ்வதுண்டாம்.

மிகவும் கூச்ச சுபாவம் கொண்ட காகங்கள், நான் வெஜிட்டேரியன் உணவு முறை கொண்டவை. எது கிடைக்கிறதோ எல்லாவற்றையும் உண்ணும். எனினும் ஒரு காக்கைக்கு உணவு கிடைத்தால், சுற்று வட்டாரத்தில் இருக்கும் எல்லா காக்கைகளையும் அழைத்துதான் உண்ணும். ஒழுக்கமான பறவை. ஒருதார மணம்தான் செய்துக் கொள்ளும் என்கிறார்கள்.  ஆண் - பெண் காகங்களின் தாம்பத்தியத்தின் வாயிலாக பெண் காகம், நான்கு முதல் ஏழு முட்டைகள் வரை இடும். இந்த முட்டைகளை பெண் காகம் அடை காக்கும்போது, ஆண் காகம் கூட்டைக் காக்கும் பணியை மேற்கொள்கிறது. போலவே, அடை காக்கும் காலத்தில் பெண் காகத்துக்கு இரை தேடிச்செல்லும் வேலை இல்லை. அதையும் ஆண் காகமே பார்த்துக் கொள்ளும். 40 நாட்கள் அடை காக்கும் காலம். இச்சமயத்தில் பெண் காகம் நீர் அருந்துவதில்லை.

முட்டையிலிருந்து குஞ்சுகள் வந்ததுமே ஆண் துணையை, பெண் காகம் விரட்டி அடித்து விடும். குஞ்சுகளுக்கு சிறகு முளைக்கும் வரை பெண் காகம்தான் இரை கொடுக்கும். இச்சமயத்தில் துணையைப் பிரிந்த விரக்தியில் ஆண் காகம் ‘தேவதாஸ்’ கணக்காக (தாடி வளருமா என துல்லியமாக தெரியவில்லை) கரண்ட் கம்பிகளில் அமர்ந்து பரிதாபமாகக் கரைந்துக் கொண்டிருக்கும். பறவைகளில் காகம் மட்டுமே ஒப்பாரி வைக்கும் தன்மை கொண்டது என்பது குறிப்பிடத்தக்கது. ஏதேனும் காக்கை, மின்கம்பியில் மாட்டி இறந்துவிட்டால் கூட்டம் கூடி ஒப்பாரி வைப்பதை நீங்களே கண்டிருக்கலாம்.

காக்கை, ஒழுக்கத்தைப் போலவே பெருந்தன்மையான தன்மையையும் கொண்டது. இனிமையாக கூவும் குயில்களுக்கு கூடு கட்டி குஞ்சு பொரிக்கத் தெரியாது.  குயிலின் இனப்பெருக்க காலமும் காகத்தின் இனப் பெருக்க காலமும் ஒன்றாக அமையும். குயிலின் இனப்பெருக்க காலத்தில் ஆண் குயில் ஒரு காகத்தின் கூட்டை தேடிச் சென்று காகத்தின்  ஒரு முட்டையை தூக்கிச் செல்லும் அப்போது காகம் அதனை துரத்திச் செல்லும். அச்சமயம் பெண் குயில் காகத்தின் கூட்டிற்குள் தனது முட்டையினை இட்டுவிடும். பின்னாளில் இந்த தந்திரத்தை அறிந்தும் கூட காகம் குயிலின் முட்டைகளை சேர்த்து, பெருந்தன்மையாக அடைகாக்கும். பின்பு குஞ்சுகள் வெளிவந்ததும் குயிலின் குஞ்சுகள் எனத் தெரிந்தும் இரை கொடுக்கும். அச்சமயம் குயிலின் குஞ்சு காகத்தின் குஞ்சு போலவே ஒலி எழுப்பும்.  காகம் தன் இனத்தை மட்டுமின்றி மற்றொரு இனத்தையும் இனப்பெருக்கம் செய்யும் பண்பு கொண்ட பறவையாக இருக்கிறது.

காகம், நமக்கு எவ்வளவோ நல்ல பண்புகளை சொல்லிக் கொடுக்கிறது. இருப்பினும் ஒட்டுண்ணித் தன்மை கொண்ட மனிதன், தன்னுடைய இழிவான அடிவருடித் தனத்துக்கு ‘காக்கா பிடிப்பது’ என்று பேர் வைத்து காக்கைகளை இழிவுப்படுத்துகிறான். உண்மையில் ‘காக்கா பிடிப்பது’ என்பது ‘சுயநலத்துக்காக அடுத்தவனின் கால், கை பிடிப்பது’. அதற்கும் காக்கைக்கும் எந்த சம்பந்தமுமில்லை.

- புத்தன்

Related Stories: